கொறடா உத்தரவை மீறினால் ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகுமா?
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.எனவே அரசு கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்பது சந்தேகம்.
சென்னை: அதிமுகவின் 134 எம்.எல்.ஏக்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று
அதிமுக கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்ட நிலையில் ராஜேந்திரனையும் சேர்த்து ஓ.பி.எஸ் தரப்பை சேர்ந்த மதுசூதனன் (அதிமுக அவைத் தலைவராக இருந்தவர்), பதவி நீக்கம் செய்துள்ளதால் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவின் 134 எம்எல்ஏக்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக கொறடா ராஜேந்திரன் இன்று உத்தரவு பிறப்பித்தார். கொறடா உத்தரவை மீறினால் எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதால் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் மதுசூதனன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் ராஜூ, சி. விஜயபாஸ்கர், கொறடா அரியலூர் ராஜேந்திரன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, வளர்மதி, ராஜ்யசபா எம்பி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்கியதாக அறிவித்தார்.
நடவடிக்கை பாயுமா?
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே யாரை ஆதரிக்கவேண்டும் என்ற அரசு கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்பது கவனிக்கத் தக்க ஒன்றாக உள்ளது.
முன்கூட்டியே கூற வேண்டும்
ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை சபாநாயகருக்கு முன்கூட்டியே அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். அதைத்தான் இன்று, செம்மலை, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் சபாநாயகரை சந்தித்து செய்ததாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் மற்ற எம்.எல்.ஏ.க்கள், ஒருவேளை கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு கொறடா கோரிக்கை விடுக்க முடியும்.
சசிகலா அதிகாரம் செல்லுமா?
ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலரை கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக இருந்துகொண்டு சசிகலா நீக்கியது செல்லத்தக்கதா? என்ற சட்டரீதியான கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி சசிகலா எடுத்த முடிவு செல்லாது என்பதை தலைமை தேர்தல் ஆணையம் நஜீம் ஜைதியிடம் நேற்று அதிமுக எம்.பி மைத்ரேயன் தலைமையிலான குழு சந்தித்து கோரிக்கை மனுவாக அளித்துள்ளது.
நீதிமன்றம்தான் தீர்வா
இதனிடையே, மைலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ நடராஜ் இன்று திடீரென எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளார். கட்சியை விட்டு நீக்கப்படாத இவர் அப்படி வாக்களித்தால் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் வாய்ப்புள்ளது. எனவே, சட்டசபையில் நாளை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை கோர்ட்டு வரை செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.