திமுகவை சீண்டவே தினகரனை மகள் நிச்சயதார்த்தத்துக்கு அழைத்தாரா திருநாவுக்கரசர்? புதிய பஞ்சாயத்து
திமுகவை சீண்டவே தினகரனை மகள் நிச்சயதார்த்தத்துக்கு திருநாவுக்கரசர் அழைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை: மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் டிடிவி தினகரனுக்கு திருநாவுக்கரசர் அதிக முக்கியத்துவம் கொடுத்தது புதிய பஞ்சாயத்தாக கிளம்பியுள்ளது.
திருநாவுக்கரசர் மகளுக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் மகன் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிச்சயதார்த்த விழாவில் தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.

தனி ஆலோசனை
இந்நிகழ்ச்சியில் தினகரனுக்கு தடபுடலாக வரவேற்பு கொடுத்ததுடன் அவருடன் தனியாக 20 நிமிடம் பேசியிருக்கிறார் திருநாவுக்கரசர். இச்சந்திப்பின் போது எடப்பாடி, ஓபிஎஸ்ஸை வீழ்த்தி அதிமுகவை மீண்டும் கைப்பற்றுங்கள் என வலியுறுத்தியிருக்கிறார் திருநாவுக்கரசர்.

மேலிடத்துக்கு புகார்
அத்துடன் திருநாவுக்கரசர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக டெல்லிக்கு வழக்கம்போல காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் புகார் அனுப்பினர்.

விளக்கம் கேட்ட காங்கிரஸ்
இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியடைந்து திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்டிருந்தது. திருநாவுக்கரசரோ சம்பந்தி இசக்கி சுப்பையாதான் அழைத்ததாக சாக்கு போக்கு சமாளித்திருக்கிறார்.

திமுகவை சீண்டும் நடவடிக்கை
இருப்பினும் திமுகவுடனான நல்லுறவில் இருக்கும் நிலையில் திருநாவுக்கரசர் தினகரனுக்கு முட்டுக் கொடுத்து வருகிறார்... இது திமுகவை சீண்டும் அவரது தொடர் நடவடிக்கைதான் என மீண்டும் புகார் அளித்திருக்கிறார்கள் கோஷ்டி தலைவர்கள்.












Click it and Unblock the Notifications