காஞ்சியில் இருந்து வந்து தென்காசியில் களம் காணும் காங்கிரஸ் ஜெயக்குமார்
தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் காஞ்சிபுரம் ஜெயகுமார்.
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளூர் பிரமுகர்களும் புதுமுகங்களும் விருப்ப மனுக்களை அளித்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து 36 பேரின் விருப்ப மனுக்களை புறந்தள்ளி ஜெயக்குமாரை வேட்பாளராக அறிவித்துள்ள கட்சித்தலைமை.
காஞ்சிபுரம் மாவட்டம் பினாயூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் பி.இ. மெக்கானிக்கல் முதுகலை பட்டம் பெற்றவர் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்.
வறுமை ஒழிப்பு வழிகள் என்ற தலைப்பில் டாக்டர் பட்டம் பெற்ற ஜெயக்குமார் அமிர்தம் கல்வி நிறுவங்களை காஞ்சிபுரத்தில் நடத்தி வருகிறார்.
1998 - 2000 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக பொறுப்பு வகித்த இவர் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும், பின் வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராகவும், 2011 ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஐவர் குழு உறுப்பினர் ஆகவும் கட்சி பதவிகள் வகித்தவர்.
2001 முதல் 2011 வரை நாமக்கல் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த ஜெயகுமார் 1996 ல் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். 1998 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
தென்காசி தொகுதியில் 3½ லட்சம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் உள்ளனர். ஜெயக்குமார் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். எனவே மெஜாரிட்டியாக உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் யாரையாவது நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தேர்தல் பணியில் ஈடுபடமாட்டோம் என சொந்தக்கட்சிக்காரர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். பலமுனை போட்டிகளையும் தாண்டி சொந்தக்கட்சிக்காரர்களை சமாளித்து வெற்றி பெறுவாரா டாக்டர் ஜெயக்குமார்?.