தமிழகத்தில் காங். ஆட்சி மலர பாடுபட வேண்டுமாம்... குஷ்புவின் 'அடடே' பேச்சு
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலர பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி மலர பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தளராத நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்.
நீட் நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேசியதாவது:
கோவா, மணிப்பூர் மாநிலங்களில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் பண பலத்தால் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்சி செய்யவில்லை. அதனால் காங்கிரசுக்கு அந்த மாநிலத்தில் தோல்வி கிடையாது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜக மிக பெரிய கனவில் உள்ளது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வருவோம் என ராகுலும், சோனியா காந்தியும் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கையின் படி தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு குஷ்பு ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.