மாணவர்களின் தொடர் போராட்டம்... புதுச்சேரி துணைவேந்தருக்கு கட்டாய விடுப்பு
புதுச்சேரி: மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக் கழக துணை வேந்தருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் 3 ஆயிரம் மாணவர்கள் தங்களது 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்யக் கோரியும் கடந்த 27ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சுமார் 15 நாட்களுக்கும் மேலாக மாணவர்களின் போராட்டம் நீடித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை விடுப்பில் செல்லுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இதனால், சந்திரா நீண்ட விடுமுறையில் சென்றுள்ளார்.
சந்திரா நீண்ட விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.