கோஷ்டி மோதலில் காங். தொழிற்சங்க மூத்த தலைவர் நஞ்சப்பன் உயிரிழந்தார்?
சென்னை: அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி.யின் மூத்த தலைவர் நஞ்சப்பன் உயிரிழந்ததாக சர்ச்சையை வெடித்துள்ளது.
ஐ.என்.டி.யூ.சி.யின் மூத்த தலைவரான கோயம்புத்தூர் நஞ்சப்பன் திடீரென காலமானார். அவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நஞ்சப்பன் மரணமே, ஐ.என்.டி.யூ.சி. அமைப்புக்குள் ஏற்பட்ட மோதலால் நிகழ்ந்தது என சர்ச்சை வெடித்தது. காங். தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி.யை தமிழக காங்கிரஸ் கட்சி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சுதந்திரமானது.
அதிமுகவுக்கு ஆதரவால் சர்ச்சை
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது. ஆனால் ஐ.என்.டி.யூ.சி.யோ அதிமுகவை ஆதரித்தது. கடந்த சில ஆண்டுகளாக ஐ.என்.டி.யூ.சி. தலைவர் காளன் தொடர்ந்து அதிமுகவை ஆதரித்து வருகிறார். இது அந்த அமைப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நஞ்சப்பன் எதிர்ப்பு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நஞ்சப்பன் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். இதற்கு காளனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
மயங்கிய நஞ்சப்பன்...
இந்த அமளியில் திடீரென நஞ்சப்பன் மயங்கி விழுந்தாராம். சிறிது நேரம் கழித்து மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
|
மேலிடத்தில் புகார்
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நஞ்சப்பன் ஆதரவாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஐ.என்.டி.யூ.சி. அமைப்பை காங்கிரஸ் மேலிட முடிவுகள் கட்டுப்படுத்தும் வகையில் கட்சியின் சட்டவிதிகள் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.