''ஏய்யா.. பருத்திப் பால் சாப்டுட்டுப் போய்யா பசி தாங்கும்''... தேர்தல் பிரசாரத்தில் கலகல காட்சிகள்!
மதுரை: தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதை விட அடிக்கிற வெயில் படு ஹாட்டாக இருக்கிறது. இந்த நேரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் சாதாரண தொண்டர்கள் எப்படியெல்லாம் இந்த வெயிலையும் அலைச்சலால் ஏற்படும் சோர்வையும், பசியையும் சமாளிக்கிறார்கள் என்று பார்த்தால் விதம் விதமான மேட்டர்கள் கிடைத்தன.
குறிப்பாக மதுரை பக்கம்தான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்போர் அதி புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்களாம்.
வெயிலைச் சமாளிக்கவும், பசியைச் சமாளிக்கவும் விதம் விதமான வழிகளைக் கையாண்டு வெயிலையே விரட்டியடித்து வருகிறார்களாம்.. வாங்க அதையும்தான் என்னன்னு பார்த்துட்டு வருவோம்...
சூடான பருத்திப் பால்...
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் பார்ததிருப்பீர்கள்.. ஒற்றன் முத்துப்பாண்டியை உட்கார வைத்து கொஞ்சம் பருத்திப் பால் குடிக்கிறாயா என்று அக்கறையுடன் கேட்பார் ராசா வடிவேலு. அந்த பருத்திப் பால்தான் இப்போது மதுரை பக்கம் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்போரின் ஹாட்டஸ்ட் காலை பானமாக மாறியுள்ளது.
பருத்திப் பாலில் அப்படியென்ன விசேஷம்
நிறைய இருக்குண்ணே.. ஒன்றா இரண்டா.. ஆயிரம் காரணம் இருக்கிறது. பருத்திப் பால் பசியை அமர்த்தும். சளியை முறிக்கும். சோர்வைப் போக்கும். சக்தியைக் கொடுக்கும். இப்படி நிறைய உள்ளது.
மதுரை பக்கம் ரொம்ப பேமஸ்....
பருத்திப் பால் மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் மதுரைப் பக்கம் ரொம்பவே பிரபலம். பருத்திப் பால் குடித்து வளராத 'மருதைக்காரங்களையே' பார்க்க முடியாது.. அப்படி, மதுரையின் தேசிய பானம் அது.
ஒரு டம்பளர் 10 ரூபாதாய்யா
தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பலரும் பருத்திப் பால் சாப்பிட்டு விட்டுத்தான் வெளியிலேயே கிளம்புகிறார்கள். வீட்டில் குடிப்பதோடு வெளியில் விற்கும் பருத்திப் பாலுக்கும் அங்கு நல்ல வியாபாரம் நடக்கிறாம். ஒரு டம்பளர் ரூ. 10 வரை விற்கிறார்களாம்.
மாசி வீதிகளில்...
மேலமாசி வீதி, கீழமாசி வீீதி, வடக்கு மாசி வீதி, தெற்குவாசல் என மதுரையின் சில முக்கியப் பகுதிகளில் இந்த பருத்திப் பால் ரொம்பப் பிரபலம். எப்படி இட்லிக்கும், இடியாப்பத்திற்கும் என்றே சில ஏரியாக்கள் ஸ்பெஷலாக இருக்குமோ, அதே போல பருத்திப் பாலுக்கு இந்த ஏரியாக்கள் விசேஷமானவை.
வாய்யா .. ஒரு வா குடிச்சிட்டுப் போகலாம்
பிரசாரத்தில் ஈடுட்டிருப்போர் தவறாமல் வழியில் ஏதாவது பருத்திப் பால் விற்பனையகத்தைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி ஒரு கப் வாங்கிச் சாப்பிடாமல் போவதில்லை. அது ஆட்டோவாக இருந்தாலும் சரி, இன்னோவா காராக இருந்தாலும் சரி.. பருத்திப் பாலைப் பார்த்தாலே வண்டி ஓடாது என்ற நிலைதான்.
அடுத்து இளநீர்
இதேபோல குளிர்ச்சியைத் தரும் இளநீருக்கும் நல்ல கிராக்கி இருக்கிறதாம். இளநீரை குடித்தால் குளிர்ச்சி தருவதோடு, வயிற்றுப் பசிக்கும் நல்ல பானம் என்பதாலும், சூட்டையும் குறைக்கிறது என்பதால் இதற்கும் நல்ல கிராக்கி நிலவுகிறது.
நொங்கு அல்லது நுங்கு
அதேபோல நொங்கு அல்லது நுங்கு க்கும் நல்ல கிராக்கி நிலவுகிறது. தற்போது நுங்கு சீசன் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்ற போதிலும் தாராளமாகவே கிடைக்கிறது. மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து நுங்கு வந்து குவிவதால் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்போர் மட்டுமல்லாமல் மக்களும் கூட ஆசையாய் வாங்கி கை விரல்களில் நுங்கின் நீர் வழிய வழிய சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.
அண்ணே வாங்கண்ணே, சர்பத் சாப்டுட்டு போங்க!
மதுரையில் ஏதாவது கடைப் பக்கம் போய் விட்டால் இந்த அன்பான அழைப்பை கேட்காமல் தாண்டவே முடியாது. நம்ம வீட்டுத் தம்பி போலவே உரிமையுடந் இப்படிக் கேட்பார்கள்.. ப்ரீயாக இல்லை பாஸ், காசு கொடுத்துத்தான் குடிக்கோனும். இந்த சர்பத்தின் சிறப்பைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுவும் இப்போது செம ஓட்டமாக உள்ளதாம்.
தர்பூசணி
இப்போது மதுரையில் தர்பூசிணியும் கூட களை கட்டி வருகிறது. நிறையப் பேர் தர்பூசணியை வாங்கிச் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படியே கடித்துச் சாப்பிடுவது, ஜூஸ் ஆக்கிச் சாப்பிடுவது என விதம் விதமாக ஒரு பிடி பிடிக்கின்றனர்.
பவன்டோ, காளி மார்க் சோடா...
இது போக மதுரையின் பாரம்பரிய குளிர்பானங்களான பவன்டோ, காளி மார்க் சோடா உள்ளிட்டவற்றுக்கும் வழக்கம் போல நல்ல கிராக்கிதான்.
போடுங்கம்மா ஓட்டு...
இப்படி சூட்டைத் தணித்தபடி, வயிற்றுப் பசியைச் சமாளித்தபடி.. அண்ணன் வருகிறார்.. உங்கள் வீடு தேடி வருகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளை வியர்க்க விறுவிறுக்க வருகிறார்.. போடுங்கம்மா ஓட்டு.. பார்த்து.. என்று வாய் வலிக்க, நரம்பு புடைக்க கத்தியபடியும் ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள் பல்வேறு கட்சியினரும்.