தக்கோலம் காவலர் கொலை: தேமுதிக பெண் கவுன்சிலர் மகன் கைது
வேலூர்: அரக்கோணம் அருகே மணல் திருட்டை தடுக்கச் சென்ற தலைமைக் காவலரை டிராக்டர் ஏற்றி படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தே.மு.தி.க. கவுன்சிலர் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் காவல் நிலையத்திற்கு நேற்று காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தொலைபேசியை எடுத்து பேசியுள்ளார். மறுமுனையில் பேசியவர், "தக்கோலம் அருகே புரசை ஆற்று பகுதியில் மணல் அள்ளியவாறு ஒரு டிராக்டர் உள்ளது. விரைந்து சென்றால் அதனை பிடிக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்நது சப்-இன்ஸ்பெக்டர் ராஜனும், தலைமைக் காவலர் கனகராஜும் இரு சக்கர வாகனத்தில் புரசை ஆற்றுக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு ஒரு டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு இருப்பதை பார்த்த அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு டிராக்டரை பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
தப்ப முயற்சி
காவலர்கள் வருவதை பார்த்த டிரைவர் டிராக்டருடன் தப்ப முயன்றுள்ளார். அப்போது காவலர் கனகராஜ், டிராக்டரை நிறுத்து, நிறுத்து என்று கூறியவாறு டிராக்டரை நெருங்கியபோது டிரைவரின் சட்டையை பிடித்து டிராக்டரை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
காவலர் கனகராஜ் மரணம்
அப்போது, டிராக்டரை நிறுத்துவதாக கூறிய டிரைவர் நிறுத்தாமல் திடீரென்று டிராக்டரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது டிராக்டரின் பின்னால் உள்ள டிரைலர், காவலர் கனகராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த கனகராஜ் மீது டிராக்டரின் டிரைலர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். உடனே டிராக்டரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் பிடிக்க முயன்றார். ஆனால் டிராக்டர் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது.இது தொடர்பாக தக்கோலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பெண் கவுன்சிலர் மகன்
காவலர் மீது டிராக்டரை ஏற்றி கொன்று விட்டு டிராக்டருடன் தப்பி சென்றவர் தக்கோலத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் சுரேஷ் என்பது தெரியவந்தது. தேவராஜின் மனைவி செண்பகவல்லி தக்கோலம் பேரூராட்சி 6வது வார்டு தே.மு.தி.க. கவுன்சிலராக உள்ளார்.
கைது செய்த போலீஸ்
இந்நிலையில், தலைமறைவாக இருந்த சுரேஷை காட்பாடி அருகே திருவலத்தில் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும், டிராக்டரையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், சுரேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.