சென்னை: ஷாப்பிங் மால்களில் சிசிடிவி கேமரா பொருத்த போலீஸ் கமிஷனர் உத்தரவு
சென்னை: சென்னையிலுள்ள வணிக வளாகங்கள், ஹோட்டல்களில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவம் போல, சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், ஹோட்டல்களில் தீவிரவாதிகள் ஊடுருவி மிகப்பெரிய தாக்குதல் சம்பவங்களை நடத்தலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் முடிவில், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வணிக நிறுவனங்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு வைத்துள்ளதாக இ.மெயில் வந்தது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அனைவரையும் பரிசோதனை செய்தனர். ஷாப்பிங் மால் முழுவதும் தேடியும் வெடிகுண்டு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் காவல்துறை ஆணையர் தலைமையில், வணிக வளாக மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு தீபாவளி தினத்திற்கு முன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், காவல்துறை அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.