ரேண்டம் சாம்பிள் சோதனை.. இதை நாம் செய்யவே இல்லை.. தமிழகம் செய்த முக்கிய தவறு.. சிக்கலாகுமா?
தமிழகத்தில் கொரோனா அறிகுறி இல்லாத நபர்களை சோதனை செய்வது இல்லை, கொரோனா அறிகுறி உள்ளவர்களை மட்டுமே சோதனை செய்கிறது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா அறிகுறி இல்லாத நபர்களை சோதனை செய்வது இல்லை, கொரோனா அறிகுறி உள்ளவர்களை மட்டுமே அரசு சோதனை செய்கிறது. தமிழக அரசின் இந்த செயல் கொரோனா பரவலை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் குறித்து சில விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறோம்.. ஆனால் கொரோனா குறித்து நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆம் கொரோனா குறித்த பல விஷயங்கள் இன்னும் புதிராகத்தான் இருக்கிறது.
கொரோனா குறித்து உலக சுகாதார மையம் தொடங்கி பல்வேறு மருத்துவர்கள் வரை இன்னும் ஆராய்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனா குறித்து தற்போது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கும் விஷயம் அதன் Asymtomatic குணம். இதுதான் தமிழகத்திற்கும் சிக்கலாக முடிந்துள்ளது.

அறிகுறி இல்லை
பொதுவாக கொரோனா வந்தால் உடனே அறிகுறி ஏற்படுவதுதான் வழக்கம். அதாவது ஒருவருக்கு கொரோனா வந்தால் அவருக்கு 14 நாட்களுக்குள் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு அடைப்பு போன்ற அறிகுறிகள் வரும். ஆனால் சமீப நாட்களாக இப்படி அறிகுறி எதுவும் இல்லாமலே கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது. இதுதான் கொரோனாவின் Asymtomatic குணம் ஆகும். கொரோனாவின் இந்த அறிகுறியற்ற தன்மை கொஞ்சம் ஆபத்து ஆனது .

ஏன் ஆபத்தானது
இது ஆபத்தானது என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. ஒருவருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா இருந்தால் அவர் தனக்கு கொரோனா இல்லை என்று நினைத்துக் கொண்டு மக்களுடன் சகஜமாக பழகுவார். மக்களுடன் சுதந்திரமாக சுற்றுவார். இதனால் பலருக்கும் கொரோனா பரவும். அந்த நபர் தனக்கு இருப்பது தெரியாமலே அவர் பலருக்கும் கொரோனாவை பரப்புவார். அதேபோல் இவருக்கு சிகிச்சை அளிக்கவும் முடியாது.

சிகிச்சை அளிப்பது கஷ்டம்
இந்த நபர் தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதி ஆக மாட்டார். இதனால் அவருக்கு திடீர் என்று கடைசி நேரத்தில் மூச்சு அடைப்பு ஏற்படும். உறுப்புகள் செயல் இழக்கும். கடைசி நேரத்தில் மருத்துவமனையில் சேர்ந்தால் அவருக்கு எந்த சிகிச்சையும் பலன் அளிக்காது. இது உயிரை கொல்லும். ஆகவே அறிகுறி இருக்கும் கொரோனாவை விட அறிகுறி இல்லாத கொரோனாதான் அதிக ஆபத்து ஆனது.

இதை தடுக்க ஒரே வழி
இப்படி அறிகுறி இல்லாமல் கொரோனா பரவுவதை தடுக்க ஒரே வழி சோதனைதான். அதாவது கொரோனா அறிகுறி உள்ளவர்களை மட்டும் சோதனை செய்தால் போதாது. கொரோனா அறிகுறி இல்லாத நபர்களையும் சோதனை செய்ய வேண்டும். இதை ரேண்டாம் சாம்பிள் சோதனை என்று கூறுவார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் கொரோனா அறிகுறி இல்லாத நபர்களை அழைத்து 50-100 பேர் வீதம் சோதனை செய்வார்கள். இதன் மூலம் ஸ்டேஜ் 3 ஏற்பட்டு உள்ளதா, அறிகுறி இல்லாமல் மக்களுக்கு இடையே கொரோனா பரவுகிறதா என்று கண்டுபிடிக்க முடியும்.

ரேண்டம் சாம்பிள் சோதனை
ஆனால் இங்குதான் தமிழகம் பின் தங்கி உள்ளது. தமிழகம் இதுவரை ஒரு ரேண்டம் சாம்பிள் சோதனை கூட செய்யவில்லை. மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே பல நூறு பேருக்கு ரேண்டம் சாம்பிள் சோதனை செய்துள்ளது. கேரளாவில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ரேண்டம் சாம்பிள் சோதனையும் அடக்கம். அதேபோல் மகாராஷ்டிராவில் ரேண்டம் சாம்பிள் சோதனை உட்பட 15 ஆயிரம் பேருக்கு மொத்தமாக கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிலை
ஆனால் தமிழகத்தில் ரேண்டம் சாம்பிள் சோதனை செய்யப்படுவது இல்லை. கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த சோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார். அதில், அதிக ரிஸ்க் இருக்கும் நபர்கள், பிரைமரி தொடர்பு கொண்ட நபர்கள் ஆகியோருக்கு முதலில் கொரோனா சோதனை செய்யப்படும். அவர்களை தொடர்பு கொண்ட செகண்டரி காண்டாக்ட் நபர்களுக்கு உடனே சோதனை செய்ய மாட்டோம். அவர்களை வீட்டில் இருக்கும்படி கூறி, அவர்களை கண்காணிப்போம். அறிகுறிகள் வந்தால் மட்டும்தான் சோதனை செய்வோம், என்று கூறியுள்ளார்.

அறிகுறி வந்தால் மட்டும்
அதாவது அறிகுறி வந்தால் மட்டும்தான் சோதனை என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதுதான் தமிழக அரசுக்கு சிக்கலாக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் கடந்த வாரம் ராமநாதபுரத்தில் பலியான நபர், அதன்பின் தேனியில் பலியான நபர், அதன்பின் இரண்டு நாட்கள் முன் சென்னையில் பலியான நபர் எல்லோரும் கடைசி நேரத்தில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு பலியான நபர்கள். அதாவது இவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லையென்று கொரோனா சோதனை செய்யப்படவில்லை.

திடீர் என்று பலியானார்கள்
இவர்கள் மூன்று பேரும் கொரோனா காரணமாக பலியான பின்தான் அவர்களுக்கு கொரோனா இருப்பதே கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இவர்கள் அறிகுறி இல்லாமலே கொரோனா வந்து கடைசி நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதன்பின் பலியாகி உள்ளனர். தமிழக அரசு கொரோனா அறிகுறி இல்லாதவர்களை சோதனை செய்யாமல் விட்டதன் விளைவாக இவர்கள் மூவரும் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

உடனே தொடங்க வேண்டும்
இதனால் தமிழக அரசு அறிகுறி இருக்கும் நபர்களை மட்டுமின்றி அறிகுறி இல்லாத நபர்களையும் சோதனை செய்ய வேண்டும். அதேபோல் உடனே தமிழக அரசு ரேண்டாம் சாம்பிள் சோதனை முறையை கையில் எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஸ்டேஜ் 3 பரவல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியும். இதுதான் மேலும் கொரோனா உயிர் இழப்புகளை குறைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications