குற்றாலம் சித்திர சபையில் 600 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்
தென்காசி: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலின் துணைகோயிலான சித்திர சபையில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா திங்கட்கிழமை செப்டம்பர் 16ம் தேதி நடைபெறுகிறது.
பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திர சபையில் சுமார் 600 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
குற்றாலநாதர் கோயிலின் துணை கோயிலாக சித்திர சபை அமைந்துள்ளது. இங்குள்ள மூலிகை ஓவியங்களுக்கு பல ஆண்டுகளுக்கு பின்பு மூலிகைகளால் வர்ணம் தீட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி உபயதாரர்கள் பணியாக சுமார் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஓவியங்களில் மூலிகை வர்ணம் பூசப்பட்டது.
பஞ்ச சபை
ஆடல்வல்லான், திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் சித்திர சபையும் ஓன்று. சிவபக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வரப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு பிறகு ஓவியங்கள் மெருகூட்டப்பட்ட நிலையில் தற்போது சித்திர சபை வண்ணமிகு ஓவியங்களால் பளிச்சென பக்தர்களுக்கு காட்சி அளித்த வண்ணம் உள்ளது.
புத்துயிர் பெற்ற ஓவியங்கள்
இந்த ஓவியங்களில் நடராஜபெருமான், மதுரை மீனாட்சி கல்யாண வைபவம், முருகரின் அவதாரங்கள், பத்மநாதசுவாமி, எட்டு அவதாரங்களில் துர்க்கை மற்றும் பைரவ சுவாமிகள், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சித்திரங்கள் பளிச்சென காணப்படுகின்றன.
தீர்த்தம் எடுத்தல்
சித்திர சபையில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் 16ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை (15ம் தேதி) காலை 5 மணிக்கு அனுக்ஞை, மகா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி, கோபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு தீர்த்த சங்கரகர்ணம் குற்றால அருவியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும்.
திருக்குட நன்னீராட்டு விழா
கும்பாபிஷேக நாளான நாளை 16ம் தேதி காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம்புறப்படுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் சித்திர சபை விமானம் மற்றும் மூலவர் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.
அமைச்சர்கள் பங்கேற்பு
மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் கண்ணன், ஆணையர் தனபால், தென்காசி எம்.பி., லிங்கம், எம்.எல்.ஏ., சரத்குமார், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ராஜா, இணை ஆணையர் கவிதா, உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.