ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடிக்கு திடீர் ஆதரவு.. வைகோ மீது முத்தரசன் சாடல்
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதற்கு கூடுதல் எடுத்துக் காட்டாக ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கடுமையாக சாடியிருக்கிறார்.
இம்மாதம் 8-ம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். கருப்புப் பணத்தை ஒழிக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
இருப்பினும், இந்த அறிவிப்பினால் ஏழை-எளிய மக்கள் அன்றாடம் வங்கிகளில் காத்துக்கிடக்கும் அவலம் எழுந்துள்ளது என்றும், அப்பாவி மக்கள் செத்து மடிந்து வருவதாகவும் கூறி இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் யாரும் இந்த அறிவிப்பினால் கவலைப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார எனறார். இருப்பினும், யாரைக் குறிவைத்து இந்த திட்டத்தை அறிவித்தாரோ அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் சொத்துக்களாகவும், தங்க நகைகளாகவும் அவற்றை பதுக்கி விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
எனவே, இந்த நடவடிக்கையால் அப்பாவி மக்கள் தான் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என்றார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ ஆதரவு அளிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முத்தரசன், ரூபாய் நோட்டு பிரச்னையில் பிரதமர் மோடிக்கு வைகோ ஆதரவு அளித்தால் 7 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களை விடுவிக்கும் செயலுக்கும் வைகோ துணை போவதாகவே அர்த்தம் என்றும் தெரிவித்தார்.
மேலும், ரூபாய் நோட்டு பிரச்னையில் மோடிக்கு ஆதரவாக அவர் ஏன் செயல்படுகிறார் என்பது குறித்து வைகோதான் பதில் அளிக்க வேண்டும் எனவும் முத்தரசன் கூறினார். பாரதிய ஜனதா தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ரூபாய் நோட்டு பிரச்னையில் அரசுக்கு எதிராகவே செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவில்லை. மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இதர கட்சிகளான மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்,சிபிஐ ஆகிய கட்சிகள் திங்கள் கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.
எதிர்க்கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியின் பிற கட்சிகள் பங்கேற்ற நிலையில் மதிமுக பங்கேற்காதது அதன் கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக சிபிஐ மாநிலச் செயலாளரான முத்தரசன் கருத்து தெரிவித்திருப்பது அந்தக் கூட்டணிக் கட்சிகளிடையே மேலும் சர்சசையை உண்டாக்கி உள்ளது.