மோடி திடீர் அறிவிப்பு... பெட்ரோல் பங்க், ஏ.டி.எம். மையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
சென்னை: 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தார். மேலும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால், மாற்ற இயலாதவர்கள் மார்ச் 31-ம் தேதி வரை அடையாள அட்டையைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அலைமோதும் கூட்டம்
இந்த அறிவிப்பு வெளியாகிய சில நிமிடங்களிலே மக்கள் கூட்டம் ஏடிஎம் மையங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியது. தங்களிடம் உள்ள பணத்தை ஏடிஎம் மையங்களில் செலுத்தும் வேலைகளில் ஈடுபட்டனர். இரவு வேலை என்பதையும் பொருட்படுத்தாமல் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏராளமானோர் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பரிதவித்தனர். முன்னெறிவிப்பின்றி திடீரென அறிவித்ததால் தாங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
500 ரூபாய் வாங்க மறுப்பு
100 ரூபாய் சில்லரை தட்டுப்பாட்டால் பெட்ரோல் பங்குகள் மற்றும் மளிகைக் கடைக்கு சென்றால் 500 ரூபாய் நோட்டுகளை பெற மறுக்கிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சில இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மற்றும் கடைகளும் மூடப்பட்டுள்ளது. 100 ரூபாய் சில்லரை வைச்சிருகிறவங்க மட்டும் பஸ்ஸில் ஏறுங்க என அரசு பஸ் முதல் தனியார் பஸ் கண்க்டர்கள் கூறுகின்றனர்.இதனால் 500, 1000 ரூபாய் நோட்டு வைத்திப்பவர்கள் பஸ்ஸில் ஏறமுடியாம் பஸ் நிலையத்தில் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பொது மக்கள் அவதி
மோடியின் திடீர் அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் இன்று காலையில் அத்யாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். சிறிய பெட்டிக்கடை, பால் கடை முதல் பலகாரக் கடை வரையில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதை தவிர்ப்பார்கள். இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
எங்கு மாற்றலாம்?
பொது மக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம். வங்கிகளில் நோட்டுக்கள் எற்றுக்கொள்ளாவிடில் ரிசர்வ் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.