இனி கூவம் ஆறும் மணக்கும்... சுத்தப்படுத்த அனுமதியளித்தது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்
சென்னைவாசிகளின் நீண்டநாள் கனவான கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
சென்னை: நீண்டகாலமாக சென்னை மக்களின் கனவாக இருந்த கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டம் இனி நனவாகப் போகிறது. தமிழக அரசு கூறியிருந்த கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் சுத்தமாக ஓடும் கூவம் ஆறு, சென்னைக்குள் 16 கி.மீ. மாசடைந்த நிலையில், துர் நாற்றத்தோடு ஓடும் ஆறாக உள்ளது. கூவம் என்றாலே முகம் சுளிக்கும் நிலையில்தான் உள்ளது இந்த ஆறு. பலருக்கு இது ஆறு அல்ல சாக்கடை கால்வாய் என்றுதான் மனதில் பதிந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை ஆறுகளை மீட்கும் அறக்கட்டளை என்ற அரசு அமைப்பின் மூலம் கூவத்தை மீட்கும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்காக 2012-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது.
3 பிரிவாக திட்டம்
ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை குறுகிய கால திட்டம், 4 முதல் 8 ஆண்டுகள் வரை நடுத்தர கால திட்டம், 8 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கால திட்டம் என 3 கட்டங்களாக இத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத் திட்டம்
குறுகிய கால திட்டத்தில் ஆற்றை சுத்தப்படுத்துவது, கரையோரங்களை அழகுபடுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களில் ஆற்றின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
சுத்தப்படுத்த அனுமதி
இந்நிலையில், சென்னை கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ரூ.105 கோடி செலவில் 3 ஆண்டுகள் நடைபெறும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
|
விரைவில் பணிகள் தொடக்கம்
அதன்படி கடலை ஒட்டிய முகத்துவாரம் முதல் சேத்துப்பட்டு வரை முதற்கட்டமாக பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தூர்வாருவது, கரையோரத்தில் பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட 61 நடவடிக்கைகள் இதில் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.