தங்கச்சிமடம், கடலூர், மரக்காணம், இடிந்தகரை- மீனவர்களை தமிழகம் முழுவதும் தொடரும் கிளர்ச்சி!
குமரி மீனவர்களை மீட்கக் கோரி கடலூர், மரக்காணம், இடிந்தகரை ஆகிய இடங்களில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஓகி புயல் தாக்கியதில் காணாமல் போன குமரி மீனவர்களை மீட்கக் கோரி கடலூர், மரக்காணம், இடிந்தகரை மற்றும் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகம் மற்றும் கேரளத்தில் சில இடங்களை பதம் பார்த்துவிட்டு சென்றது. இந்த புயலின்போது ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயினர்.
இந்த சம்பவங்கள் நிகழ்ந்து 9 நாட்கள் ஆன பிறகும் இன்னும் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தராததால் கன்னியாகுமரியில் சக மீனவர்களும், உறவினர்களும் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூரில் போராட்டம்
இந்நிலையில் குமரி மீனவர்களை மீட்டு தரக் கோரி கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மறியல்
இதேபோல் ஓகி புயலின் போது மாயமான நடுக்குப்பம் மீனவர் முருகனை கண்டுபிடித்து தர கோரி விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் மீனவர்கள் திரண்டனர். பின்னர் கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரைச் சாலையில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மறியல் செய்து வருகின்றனர்.
மீனவர்கள் பேரணி
குமரி மீனவர்களைக் காப்பாற்றக் கோரி நெல்லை மாவட்டம், இடிந்தரகரையில் மீனவர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த பேரணியில் 2,000 மீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மீனவர்கள் போராட்டம் கிளர்ச்சி
தமிழகம் முழுவதும் மீனவர்களின் போராட்டம், மறியல், பேரணி என பெரும் கிளர்ச்சியே நடைபெற்று வருகிறது. குமரி மீனவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் ஒன்று திரண்டு போராடுவதை பார்க்கும்போது இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் என்றே தெரிகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி குமரியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குமரியில் சின்னத்துறையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் 2-ஆவது நாளாக இன்றும் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
|
தங்கச்சிமடம்
இதேபோல் ராமேஸ்வரத்தின் தங்கச்சிமடத்தில் இருந்து சவேரியார் ஆலயம் வரை ஆயிரக்கணக்கான மீனவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று பேரணி நடத்தினர். காணாமல் போன மீனவர்களை உடனே மீட்க இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது.