கடலூர் முது நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
கடலூர்: தொடர் மழை காரணமாக கடலூர் முதுநகரில் 100 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் இலங்கை மற்றும் குமரிக் கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது.இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கிய மழை விடாமல் பெய்து வருகிறது.

கடலூர் முதுநகரில் பெய்த காண மழையால், முதுநகர் காசுக்கடை தெரு, இருசப்பன்தெரு, சங்கரன்தெரு, சோனகர்தெரு, சுத்துக்குளம், மேட்டுத்தெரு, புதுத்தெரு, பெரியார்நகர் போன்ற பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதில் சுத்துக்குளம், பெரியார்நகர், புதுத்தெரு, மேட்டுத்தெரு ஆகிய பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகளுக்குள் மழைநீர் உள்ளே புகுந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் பாத்திரங்களை வைத்து வீட்டுக்குள் சென்ற தண்ணீரை இரைத்து வெளியேற்றினர்.
சுத்துக்குளம்- சான்றோர்பாளையம் செல்லும் சாலையை கடந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர். இதேபோல் பீமாராவ்நகர் பகுதியிலும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இது தவிர கடலூர் முதுநகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து, பள்ளமாக மாறியது. அந்த பகுதி முழுவதும் கருமேகம் சூழ்ந்து இருள் சூழ்ந்ததால் வாகனங்கள் முகப்பு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி ஊர்ந்து சென்றன.இதேபோல் கடலூர் முதுநகர் சேடப்பாளையம் சாலை, கடலூர்- சிதம்பரம் சாலைகளிலும் மழை நீர் ஆற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.












Click it and Unblock the Notifications