சென்னையை சூறையாடிய வர்தா புயல்- 1000 மரங்கள் விழுந்தன- பேருந்து கண்ணாடிகள் நொறுங்கின
வர்தா புயலின் கோரத்தாண்டவத்தை தாக்கு பிடிக்க முடியாமல் சென்னையில் 1000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தன. பேருந்து கண்ணாடிகள் நொறுங்கின.
சென்னை: வங்கக் கடலில் உருவான வர்தா புயல் ஆடிய கோரத்தாண்டவத்தில் சென்னையும், புறநகரும் சிக்கி சின்னாபின்னமானது. பேயாட்டம் போட்ட மரங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாதல் முறிந்து விழுந்தன.
சென்னையில் இதுவரை பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
இதுவரை பல மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்துள்ள பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் பலமாக உள்ளதால் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் காற்றுடன் கொட்டி வரும் கனமழையால் உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் வருகை இன்று மிகவும் குறைந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் 12 மரங்கள் புயல் காற்றினால் முறிந்துவிழுந்துள்ளன.
நீதிமன்றத்தில் இருக்கும் பணியாளர்கள் மற்ற யாரும் பணிக்கு வரவேண்டாம் என்று எச்சரித்து வருகிறார்கள். இதனால், நீதிமன்ற அலுவல்கள் முடங்கியுள்ளன.
மணிக்கு 140 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதால் மின்கம்பங்களும், மரங்களும் ஆங்காங்கே சாய்ந்துள்ளன. பேருந்துகளில் கண்ணாடிகள் விழுந்து நொறுங்கின. காற்று பலமாக வீசுவதாலும், கனமழை கொட்டி வருவதாலும் 4 மணிவரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.