தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: அக்.5 வரை மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
தென் கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென் கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் அதிகாலையில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
இருப்பினும் அவ்வப்போது விட்டு விட்டு வெயில் மற்றும் மேகமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
பரவலாக மழை
அப்போது அவர் பேசியதாவது, தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
5ஆம் தேதி வரை மழை
ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் இந்த மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 5ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
தாழ்வு மண்டலம்
இந்த மேலடுக்கு சுழற்சி அக்டோபர் 5ஆம் தேதியை ஒட்டி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். பின்னர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
புயலாக மாற வாய்ப்பு
இதைத்தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும். இதன் காரணமாக 6 முதல் 8 ஆம் தேதி வலை மீனவர்கள்
லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்கள் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்.
சென்னையில் மழை
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இவ்வாறு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.