விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டசேலம் செந்தில் குமார்... உயிரை மாய்த்துக்கொள்ளும் தலித் மாணவர்கள்
சேலம்: தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை இன்று நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கடந்த 2008ம் ஆண்டு இதே ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த தலித் மாணவர் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
செந்தில்குமார் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு (டாக்டரேட்) படித்து வந்தார். 2008-ம் ஆண்டு விடுதியில் இறந்தார். அவர் விஷம் குடித்து இறந்ததாக பிரேத விசாரணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தலித் சமுதாயத்தில் பிறந்து ஆராய்ச்சி படிப்பு வரை உயர்ந்த செந்தில்குமார் தனது லட்சியத்தை எட்டாமலேயே உயிரை மாய்த்துக் கொண்டார்.
ரோகித் வெமுலாவின் மரணத்தைப் போல 2008ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சேலம் செந்தில் குமார் மரணத்திலும் மர்மங்கள் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டு உள்ளது. செந்தில்குமார் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்தது. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு முன்னேறி ஆராய்ச்சி படிப்பு படித்தார். திடீரென்று விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
சாதீய கொடுமை
செந்தில்குமார் தற்கொலைக்குப் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையிலேயே ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தீண்டாமை கொடுமைகள் இருப்பதை கல்வியாளர் வினோத் பவராலா குழுவினர் உறுதி செய்து மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்தனர். அதன் பின் கூட தடுப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
18 மாணவர்கள் தற்கொலை
உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய கொடுமைகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. செந்தில்குமார் தற்கொலை செய்தது ஏன் என்பது மர்மமாக இருந்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ரூ. 5 லட்சம் இழப்பீடு
செந்தில்குமார் தற்கொலைசெய்துகொண்டபோது நான் தலையிட்டு அந்த மாணவரின் மரணத்துக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் இறந்துபோன மாணவரின் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு மட்டும்தான் பெற்றுத்தர முடிந்தது. ஆய்வு மாணவர்களுக்கு உதவ இந்திய அளவில் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு நான் மேற்கொண்ட முயற்சிக்கு மாணவர்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அதைக் கைவிட நேர்ந்தது என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார்.
தலித் மாணவர்கள் மீதான தாக்குதல்
இன்றைக்கு ரோகித் மரணத்திற்கு குரல் கொடுக்கும் மாணவர்கள், அன்று தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் செந்தில் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு பெரிதாக யாரும் போராடவில்லை. இன்றைக்கும் தொடர்ச்சியாக தலித் மாணவர்கள் மீதான தாக்குதல் பல கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மும்பை ஐஐடி இல் பி.டெக் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த 2007 புத்தாண்டு தினத்தன்று தற்கொலை செய்து கொண்டார்.
நீளும் தற்கொலைகள்
ஐஐஎஸ்சி இன் ஆய்வு மாணவர் அஜய் எஸ்.சந்திரா, ஹைதராபாத் மத்திய பல்கலை இயற்பியல் ஆய்வு மாணவர் செந்தில்குமார், கான்பூர் ஐஐடி இன் பி.டெக் மாணவர் பிரசாந்த் குரீத், எம்.டெக் மாணவன் ஜி.சுமன், அங்கித வெக்தா என்ற அகமதாபாத் நர்சிங் மாணவி, ஷியாம் குமார் என்ற பிடெக் மாணவர், அமராவதி என்ற ஆந்திரப் பிரதேச குத்துச்சண்டை வீராங்கனை, அவ்வூரைச் சேர்ந்த பி.காம் மாணவி பாந்தி அனுஷா, புஷ்பாஞ்சலி பூர்தி என்ற பெங்களூரு எம்பிஏ மாணவி, லக்னோ மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் சுசீல்குமார் சவுத்ரி,பெங்களூரில் விவசாய விஞ்ஞானம் படித்த ரமேஷ், கான்பூர் ஐஐடி இல் பிடெக் படித்த மாதுரி செல், ஹைதராபாத் இல் பிடெக் மாணவியான வீ. வரலட்சுமி,ரூர்கி இன் பிடெக் மாணவன் மணீஷ் குமார், லினேஷ் மோகன் காவ்லே என்ற டெல்லி பிராந்திய பொறியில் கல்லூரி ஆராய்ச்சி மாணவன், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவன் ரோகித் வெமுலா என அப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது என்பதுதான் வேதனை.