ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்: மீண்டும் போலீஸ் பாதுகாப்பு
சேலம்: கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில பொதுச் செயலாளரான ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீஸ் பக்ருத்தீன், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை சம்பவத்திற்கு பிறகு ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் ரமேஷின் குடும்பத்தார் அனைவரையும் கொலை செய்யப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இது குறித்து ரமேஷின் சகோதரர் சேஷாத்ரி போலீசில் புகார் கொடுத்தார். கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து ரமேஷின் குடும்பத்தாருக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் ரமேஷின் வீட்டுக்கு முன்பு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் அவரது வீட்டு வாசலில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.