தமிழக மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: தமிழக மழை வெள்ள பாதிப்பை, தேதிய பேரிடர் என்று அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சமீபத்திய மழை-வெள்ளத் துயர சம்பவத்தை உடனடியாக தேசிய பேரிடர் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்தடுத்து 4 சுற்று மழை வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் மிக மிக மோசமான கடுமையான பேரழிவுகளை- சேதத்தை நீங்கள் தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பீர்கள் என்பதால் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.
உள்கட்டமைப்பு
மாநிலத்தில் உள்கட்டமைப்புகளுக்கும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் தனியார் சொத்துக்களுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக மோசமான பாதிப்புகள், சேதம் ஏற்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளின் ஒருபகுதியாக குடிசைப் பகுதிகளில் தத்தம் வீடுகளை இழந்திருப்பவர்களுக்கு கருணைக் கொடைத் தொகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துணை அறிக்கை
அரசின் உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கு மத்திய-மாநில அரசுகளின் நிதி ஆதாரத்திலிருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நான் ஏற்கனவே 2015 நவம்பர் 23ம் தேதியிட்டு தாக்கல் செய்த மகஜரில் சொல்லியுள்ளபடி, சமீபத்திய வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் மொத்த சேதம் குறித்து நாங்கள் துணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வோம்.
விலைமதிப்பில்லை
இதுவரை இல்லாத இந்த மழை-வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்களது உடைமைகளையும், வீட்டு உபயோக பொருட்களையும்- சொத்துக்களையும் இழந்திருக்கிறார்கள். இவையெல்லாம் விலைமதிக்க முடியாதவை. இவர்களில் பலரும் நடுத்தர வருமான பிரிவினர், குறைந்த வருமானப் பிரிவினர். இவர்களது ஆயுளில் சேமித்த சொத்துக்களை, உடைமைகளை மழை வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது.
சில பரிந்துரைகள்
இந்த மக்களுக்கு ஒருசில விசேஷ நடவடிக்கைகளை மேற்கொண்டு அமல்படுத்த வேண்டியது அவசியம். ஆகவே ஒருசில யோசனைகளை நான் வெளியிடுகிறேன். அதை மத்திய அரசாங்கம் பரிசீலித்து விரைவில் அமல் நடத்துமானால் நான் நன்றி உடையவளாக இருப்பேன்.
இன்சூரன்ஸ்
பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலரும் தங்களது வீட்டையும், தனிப்பட்ட உடைமைகளையும், தனிப்பட்ட சொத்துக்களையும், சொந்த வாகனங்களையும் இன்சூரன்ஸ் செய்திருப்பார்கள். அவர்கள் தங்களது இந்த உடைமைகளுக்கு இன்சூரன்ஸ் பணத்தைக்கோரி (க்ளைம்) விண்ணப்பிக்கும்பட்சத்தில் அதை உடனடியாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும்.
விரைந்து பணம்
இருக்கும் நடைமுறையை சற்றே தளர்த்தி, இன்சூரன்ஸ் தொகையை அவர்களுக்கு அதிகபட்சம் 7 நாள் அல்லது 10 நாட்களுக்குள் கைக்கு கிடைக்கும்படி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உரிய விதத்தில் உத்தரவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப முடியும்.
இ.எம்.ஐ
பாதிக்கப்பட்டிருக்கும் பலரும் தங்களது வீடு, வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு வங்கியில் கடன் வாங்கி அவற்றை வாங்கியிருப்பார்கள். ஆகவே அவர்கள் எந்த விதத்திலும் சிரமப்படாத வகையில் வாங்கிய கடனை அவர்கள் திருப்பி செலுத்துவதை, அதாவது மாதாந்திர சுலபத் தவணையை (ஈ.எம்.ஐ.) தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். அதே நேரத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் சுலப மாத தவணையையும் திருத்தி அமைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு நிவாரணம் ஏற்படும்.
நீண்டகால பொருட்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சொந்த வாகனங்கள் மற்றும் நீண்ட நாட்கள் உழைக்க கூடிய மர சாமான்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், தொலைக்காட்சி பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட தங்களது வீட்டு உபயோக பொருட்களை இழந்துள்ளனர். இத்தகைய குடும்பங்கள் தங்களது ஈடுகட்டும் திறனுக்கு அப்பாற்பட்ட மிக பெரிய நிதி இழப்பை சந்தித்துள்ளன. இழந்த சொத்துக்களை உடனடியாக வாங்கவும், தங்களது இயல்வு வாழ்க்கையை மீண்டும் துவங்கவும் முடியாத மிக பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
கல்வி கடன்
ஆகவே இதை முக்கிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், வாகனங்கள் வாங்குவதற்கு எளிமையான கடனுதவி, குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்க வசதியாக கல்வி கடன்கள், அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு வசதியாக ரூ.5 லட்சம் தனிநபர் கடன் போன்றவற்றை வழங்க வேண்டும்.
சிறப்பு சான்றிதழ் தருவோம்
அத்தகைய நிதி உதவிகளை வழங்கினால் மட்டுமே, இந்த குடும்பங்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் துவங்க முடியும் என்ற சூழலில் உள்ளனர். இந்த குடும்பங்களில் பெரும்பாலானோர் ஜன்தான் வங்கி கணக்கில் இணைந்துள்ளனர். இந்த கணக்கு வைத்துள்ள குடும்பங்களுக்கு கடன் வரம்பு எல்லையை தளர்த்த வேண்டும். இத்தகைய அனைத்து குடும்பங்களுக்கும் தமிழக அரசு சிறப்பு சான்றிதழ் வழங்க தயாராக உள்ளது. அதன் அடிப்படையில் வங்கிகள் தங்களது விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன்களை வழங்க அறிவுறுத்த வேண்டும்.
கலால் வரி விலக்கு
வீட்டு உபயோகப் பொருட்களை தங்களுக்கு கட்டுபடியான விலையில் வாங்கும் வகையில் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமையலறை உபகரணங்கள், ஒயிட் குட்ஸ் (குளிர்சாதன பெட்டி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் ஸ்டவ் போன்றவை) ஆகியவற்றை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கலால் வரி விலக்குடன் 31.3.2016 வரை விற்பனை செய்ய வேண்டும்.
ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுக
வெள்ளத்தால் ஏற்பட்ட மிக பெரிய பேரழிவு குறித்த விபரங்களை தெரிவித்திருக்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்கையை மீண்டும் கட்டமைக்கும் விதமாக வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நான் தெரிவித்துள்ள வழியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கருதுகிறேன். நான் தெரிவித்துள்ளபடி சலுகை திட்டங்களை உடனடியாக உருவாக்க மத்திய நிதி அமைச்சகம் அறிவுரைகளையும், ஆணைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும்.
நடவடிக்கை
இந்த குடும்பங்கள் தங்களது தங்களது வாழ்க்கையை மீண்டும் துவங்க உதவி தேவைப்படுகிறது. எனவே எனது வேண்டுகோளின்படி உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.