தனிக்கட்சி தொடங்கி அதிமுகவை எதிர்க்க திட்டம்? தீபா சூசக தகவல்
ஜனவரி 17ம் தேதிக்கு பிறகு, மக்களிடம் முடிவை கேட்டறிந்துவிட்டு, தனிக்கட்சி தொடங்க தீபா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தனிக்கட்சி தொடங்க உள்ளதாக மறைமுகமாக தெரிவித்தார்.
சென்னை, தி.நகரிலுள்ள தீபா வீட்டின் முன்பு இன்றும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்து கோஷமிட்டனர்.

அவர்கள் மத்தியில், தீபா உரையாற்றினார். இதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், எம்ஜிஆர் நூற்றாண்டு தினத்திற்கு பிறகு நான் புதிய முடிவை அறிவிக்க உள்ளேன். மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து அதிமுக தொண்டர்களின் கருத்துக்களை கேட்க உள்ளேன். அதன் பிறகு எனது அரசியல் பிரவேசம் இருக்கும்.
மக்கள் என்னை தேடி தேடி வருவது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் மக்கள் வருகையை தடுக்க முயல்வதும், எனது பேனர், போஸ்டர்களை அகற்றுவதும் தேவையற்ற வேலை.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்த இடத்தில் சசிகலாவை வைத்து பார்க்க அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. எனவேதான் அவர்கள் என்னை தேடி வருகிறார்கள். சசிகலாவுடன் இணைந்து நான் செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை, நானும் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் மக்கள் உங்களை அத்தொகுதியில் போட்டியிட அழைக்கிறார்களே என்ற நிருபர்கள் கேள்விக்கு, மக்களிடம் நானே நேரடியாக பேசிவிட்டு அதுகுறித்து முடிவை அறிவிக்கிறேன் என்றார். இதனிடையே, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கும், ஜனவரி 17ம் தேதிக்கு பிறகு, மக்களிடம் முடிவை கேட்டறிந்துவிட்டு, தனிக்கட்சி தொடங்க தீபா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications