ஆறுமுகசாமி கமிஷன் முன்பு தீபா கணவர் மாதவன் ஆஜர்!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு தீபாவின் கணவர் மாதவன் ஆஜராகியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு தீபாவின் கணவர் மாதவன் ஆஜராகியுள்ளார். மேலும் மருத்துவர் டிட்டோவும் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷன் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பிரமாணப் பத்திரங்கள் அளிக்கலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி கூறியிருந்தார்.
ஜெ. தீபாவின் கணவர் மாதவன் சென்னை எழிலகத்தில் உள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனிடம் 18 கேள்விகள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை கடந்த மாதம் 20-ஆம் தேதி தாக்கல் செய்தார்.
இது குறித்து விளக்கம் அளிக்க இன்று ஆஜராகுமாறு தீபா கணவர் மாதவனுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியது. அதன்படி தற்போது எழிலகத்தில் உள்ள அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார். மருத்துவர் டிட்டோவும் ஆஜராகியுள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மயக்கவியல் துறை பேராசிரியர், கலா, மருந்தியல் துறை துணை பேராசிரியர், முத்துசெல்வன் ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர்.