விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணை டிசம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நாகர்கோவில்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கின் விசாரணை டிசம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
நாகர்கோவில் நாகராஜா திடலில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அ.தி.மு.க. பொது செயலாளரும், அப்போதைய முதல்வருமான ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து அரசு வக்கீல் ஞானசேகர் நாகர்கோவில் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். இதில் விஜயகாந்த் ஆஜராக வந்த போது கோர்ட்டில் அமளி ஏற்பட்டு வக்கீல்கள் இடையே மோதல் மூண்டது. இது தொடர்பாக கோட்டார் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என விஜயகாந்த் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். அதற்கு கோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து நாகர்கோவிலில் நடந்து வந்த வழக்கினை தே.மு.தி.க. மாவட்ட வக்கீல் அணி செயலாளர் பொன். செல்வராஜன் ஆஜராகி வாதாடி வந்தார்.
நேற்று இந்த வழக்கு நாகர்கோவில் அமர்வு நீதி மன்றத்தில் நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதனை வருகிற டிசம்பர் மாதம் 19-ந்தேதிக்கு நீதிபதி சந்திரசேகரன் தள்ளிவைத்தார்.