எதிர்ப்பவர்களை அவதூறு வழக்குகளால் மிரட்டுகிறார் ஜெ. - ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை எதிர்ப்பவர்களை அவதூறு வழக்குகளால் மிரட்டுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் மற்றும் முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான போது இவ்வாறு கூறினார்.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆளுநர் ரோசய்யா தொடர்ந்த அவதூறு வழக்கில், தனியார் தொலைக் காட்சிக்கு கடந்த ஏப்ரல் 30ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த ஒரு பேட்டியில், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு ரூ.15 கோடியை ஆளுநர் வாங்கி அதில் ரூ.10 கோடியை முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டு, மீதி ரூ.5 கோடியை வைத்துக்கொள்வதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை உள்நோக்கத்துடன் சுமத்தியுள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதே பேட்டிக்காக முதல்வர் ஜெயலலிதாவும் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகள் கடந்த ஜூன் 7ம்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஈவிகேஎஸ் இளங்கவோன் இன்று நேரில் ஆஜராக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து இன்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று ஆஜரானார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் கிடைக்காததால் காலஅவகாசம் கேட்டார். இதனை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை எதிர்ப்பவர்களை அவதூறு வழக்குகளால் மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். இன்னும் எத்தனை வழக்கு போட்டாலும் நான் ஆஜராவேன் என்று கூறினார்.