தினகரன், சுகேஷ்.. நேருக்கு நேர் உட்கார வைத்து கிடுக்கிப் பிடி விசாரணைக்கு தயாராகும் டெல்லி போலீஸ்!
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்ட சுகேஷையும், டிடிவி தினகரனையும் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்ட சுகேஷையும், டிடிவி தினகரனையும் நேருக்கு நேர் உட்கார வைத்து விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இரட்டை இலை, பொதுச் செயலாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணியினரிடம் தேர்தல் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இரட்டை இலையை எப்படியாவது பெற்று அதை சித்தியின் காலடியில் சேர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு மிக்கவர் என்று கூறிக் கொண்ட தரகர் சுகேஷ் என்பவருக்கு முன்பணமாக ரூ.1.30 கோடி பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
திடுக் தகவல்கள்
இதைத் தொடர்ந்து சுகேஷை டெல்லி போலீஸார் கைது செய்து நடத்திய விசாரணையில் டிடிவி தினகரனின் பெயரை கூறியது அல்லாமல் பல்வேறு திடுக் தகவல்களை வாக்குமூலமாக அளித்ததாகவும் தெரிகிறது.
4 ஆண்டு பழக்கம்
இதில் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாகவும், இரட்டை இலை சின்னம் பெற பெங்களூரில் சந்தித்து பேரம் நடத்தியதாகவும் அதற்கு கமிஷனாக ரூ.10 கோடியை சுகேஷ் கேட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணை வளையத்தில்
மேலும் இந்த விவகாரத்தில் தினகரனுக்கு சில வழக்கறிஞர்கள் தூது போயுள்ளதால், அவர்கள் அனைவரையும் விரைவில் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் தினகரனை நேரில் சந்தித்து சம்மன் கொடுப்பதற்காக டெல்லி போலீஸார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
நேருக்கு நேர் விசாரணை
அவரிடம் சம்மன் வழங்கிய பிறகு அவரை டெல்லிக்கு அழைத்து சென்று சுகேஷுடன் ஒன்றாக வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அப்போது பல்வேறு உண்மைகள் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.