மைக்கை பார்த்த இடத்தில் எல்லாம் பேசுவதை கைவிடுங்க... தமிழிசைக்கு கடிவாளம் போட்ட அமித்ஷா
தமிழக பாஜக தலைவர்கள் மைக்கை பார்த்த இடத்தில் எல்லாம் பேசுவதற்கு டெல்லி கடிவாளம் போட்டுள்ளதாம்.
Recommended Video
சென்னை: தமிழக பாஜக தலைவர்கள் செய்தியாளர்களிடம் அடக்கி பேச வேண்டும் என டெல்லி மேலிடம் கட்டளை பிறப்பித்துள்ளது.
தமிழக பா.ஜ.க கூடாரத்தில் கடந்த சில நாட்களாக கனத்த மவுனம் நிலவி வருகிறது. எதற்கெடுத்தாலும் மீடியாக்களைச் சந்திக்கும் தமிழிசை, அளவாகப் பேசி வருகிறார். தமிழக பா.ஜ.க என்றாலே மைக்கை நினைவுபடுத்தும் அளவுக்குக் காட்சிகள் நடப்பதால், அகில இந்திய தலைமை கடிவாளம் போட்டிருக்கிறது' என்கின்றனர் பா.ஜ.கவினர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைவிடக் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஆத்திரத்தில் இருக்கிறது அகில இந்திய பா.ஜ.க தலைமை. போதாக்குறைக்கு, தேர்தல் பணிகளில் நடந்த மெத்தனம் குறித்த டெல்லிக்குப் புகார் மேல் புகார் மனுக்களை அனுப்பியது தமிழிசைக்கு எதிர்கோஷ்டி.
தலைவர்கள் மீது அதிருப்தி
மாநிலத் தலைவரின் மீதான குறைகளைக் கேட்ட பா.ஜ.க தலைவர்கள், ' மாநிலத்தில் கட்சியை எப்படி வளர்ப்பது என நீங்கள் யாரும் யோசிக்கவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என ஆரம்பம் முதலே தமிழிசை கூறிவந்தார். களத்தில் போட்டியிடாவிட்டால் நிலைமை வேறு மாதிரி ஆகிவிடும் என்பதால்தான் நமது வேட்பாளரை போட்டியிட வைத்தோம்.
தேர்தல் வேலையே இல்லை
இப்போது புகார் கூறும் நீங்கள் யாரும் தேர்தல் வேலையே பார்க்கவில்லை. தலைவர் ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறீர்களே தவிர, கட்சியை வளர்க்க வேண்டும் என யாரும் நினைப்பதில்லை' எனக் கடுப்போடு பேசி அனுப்பிவிட்டனர். இதையடுத்து, டெல்லி மேலிட நிர்வாகிகளும் கமலாலயம் வந்து ஆய்வு நடத்திவிட்டுச் சென்றனர்.
தொண்டர்களிடம் இருந்து விலகியே...
இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய நிர்வாகி ஒருவர், " சசிகலா குடும்பத்துக்கு எதிராகத் தீவிரமாக வேலை பார்த்தாலும், அதையெல்லாம் ஓட்டுக்களாக மாற்றுவதற்கு கட்சி நிர்வாகிகள் யாரும் தயாராக இல்லை. ஆளுக்கு ஆள் கோஷ்டிகளை வளர்த்துக் கொண்டு செயல்படுவதால், கட்சித் தொண்டர்கள் மத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இப்படியே போனால், உள்ளாட்சியிலும் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என தலைமை அஞ்சுகிறது.
கோஷ்டிகள் குறித்து டெல்லி அதிருப்தி
மாநிலத்தில் ஆளுக்கொருவராக ஒவ்வொரு திசையில் செயல்படுவதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களில், பா.ஜ.கவினர் சிலர் படும்பாட்டையும் அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதான கட்சிகளைப் போல, கீழ்மட்ட அளவில் இருந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என அமித் ஷா கணக்கு போடுகிறார். ஆனால், இங்கிருப்பவர்களோ தொண்டர்களை அரவணைத்துச் செல்வதாக இல்லை.
மீடியா பேட்டிகளுக்கு கட்டுப்பாடு
நாளொன்றுக்கு இரண்டு மூன்று முறைகள் மீடியாக்களை சந்திப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மத்திய அரசின் கொள்கை விளக்கங்களை, எதிர்க்கோஷ்டிகளை நகையாடும் அளவுக்கு கருத்துச் செறிவோடு ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் பேசுவதில்லை.
அரவணைத்து போங்க
மாநிலத் தலைவரும் தனது சொந்தக் கருத்து என சிலவற்றைப் பேசுகிறார். இதைப் பற்றியெல்லாம் மத்திய உளவுத்துறை விரிவாக குறிப்புகளை அனுப்பியது. இதையடுத்து, தமிழிசையிடம் பேசிய அமித் ஷா, ' எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படும் இடங்களில் மட்டும் பேசுங்கள். தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதால் கட்சியை வளர்க்க முடியாது. கட்சியின் சீனியர்களையும் சக நிர்வாகிகளையும் அரவணைத்துச் செல்லுங்கள். அவர்களிடம் கலந்து ஆலோசித்து கூட்டு முடிவாக எதையும் செயல்படுத்துங்கள். இல்லாவிட்டால் அடுத்து வரும் தேர்தல்களிலும் சங்கடத்தை சந்திக்க வேண்டியது வரும்' எனக் கூறிவிட்டார். எனவேதான், கடந்த சில நாட்களாக மீடியாக்களை சந்திப்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறார் தமிழிசை" என்றார் விரிவாக.