நோட்டு நல்ல நோட்டுதான்... ஆனால் செல்லாது என்றவுடன் தூக்கிவாரிபோட்டது.. மக்கள் குமுறல் - வீடியோ
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கடந்த ஆண்டு மக்கள் சொல்லொண்ணாத் துயரை அடைந்தனர்.
சென்னை: கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது தங்களை வெகுவாக பாதித்ததாக கூறுகின்றனர் பொதுமக்கள். அதுவும் படிக்காத பாமர மக்கள் இந்த நடவடிக்கை என்னவென்றே தெரியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென ரூ. 500, ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் ஒரு குறிப்பிட்ட கெடுவுக்குள் மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் மாற்றிவிடுமாறும் அறிவுறுத்தினார்.
விவசாயிகள் பாதிப்பு
இதனால் மக்களும், சிறு குறு விவசாயிகளும், வியாபாரிகளும் அலைக்கழிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நமது ஒன் இந்தியா தமிழ் தளம் மக்களின் கருத்துகளை கேட்டுள்ளது.
கருப்பு பணம் வந்ததா?
அதில் மக்கள் கூறுகையில் , கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் மீட்கப்படவில்லை. 1947-ஆம் ஆண்டுக்கு பிறகு 40-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைத்து கருப்பு பணத்தை மீட்பதற்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் இந்த நடவடிக்கைகள் எதுவும் கைகூடவில்லை.
பட்டியல் எப்போது?
கருப்பு பணத்தை ஒழிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஷா தலைமையிலான குழுவினர் 24,000-க்கும் மேற்பட்ட தகவல்களை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. எனினும் யார் யார் எவ்வளவு கருப்பு பணத்தை வைத்துள்ளார்கள் என்பது குறித்த பட்டியலை இதுவரை மத்திய அரசு வெளியிடவில்லை.
கார்ப்பரேட்டுகளுக்கு நன்மை
நோட்டு நல்ல நோட்டுதான். ஆனால் செல்லாது என்று சொல்லிவிட்டார்கள் என்பது தங்களுக்கு மறுநாள்தான் தெரியும். மோடி செய்த இந்த பணமதிப்பிழப்பு விவகாரமானது சாமானிய மக்களுக்கு பாதிப்பையும் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு நன்மையையும் அளித்துள்ளது. வாங்கிய வண்டிக்கு தவணை கட்டமுடியாமல் அவதிப்பட்டுள்ளோம் என்று வாசகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.