வங்கிகளில் இயல்பு நிலை திரும்பாததால் தென்காசியில் மக்கள் தவிப்பு
வங்கிகளுக்கு போதிய அளவு புதிய ரூபாய் நோட்டுகள் வந்து சேராததால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
நெல்லை: தென்காசி பகுதியில் உள்ள பல்வேறு வங்கிகளில் 9வது நாளாக பொதுமக்கள் ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்றுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.
கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் வகையில் ரூ.500, ரூ.1,000, நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி இரவு அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, மக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1,000, நோட்டுகளை வருகிற டிசம்பர் 30-ந் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து வங்கிகளில் பணத்தை மாற்ற இன்று வரை கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் வங்கிகளில் பணத்தை மாற்ற அலைமோதும் கூட்டத்தைவிட கையில் இருப்பு காலியான நிலையில் அடுத்து செலவுக்கு என்ன செய்வது என்று தவிக்கும் மக்களின் நிலைமையோ மிகவும் மோசமாக உள்ளது.
ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தாலும், தென்காசி வட்டாரத்தில் உள்ள சில தனியார் வங்கி ஏ.டி.எம்.களைத் தவிர அரசு வங்கியான கனரா வங் கிஏடிஎம்களில் இன்று வரை பணம் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது.
இதுகுறித்து கனரா வங்கி மண்டல நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டால் பொறுப்பற்ற பதிலை மட்டும் பெற முடிகிறது. செங்கோட்டையில் உள்ள எஸ்.பி.டி.வங்கியிலும் இதே நிலைதான். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எஸ்.பி.ஐ. மற்றும் சில தனியார் வங்கிகளிலும் புதன்கிழமை வரை பொது மக்கள் பணத்தை மாற்றிச் சென்றனர். ஆனால் வியாழக்கிழமை பணம் இல்லாததால் வங்கிகளுக்கு பணத்தை மாற்ற
வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் வழியாக ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் ஏடிஎம் களில் பணமின்றி தவித்து வருகின்றனர். மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக, கேரளா எல்லையான தென்காசி, செங்கோட்டை பகுதி ஏ.டி.எம்.க்களில் வங்கி நிர்வாகம் பணத்தை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications