செல்லாத நோட்டு அறிவிப்பை எதிர்த்து திமுக மனிதச்சங்கிலி போராட்டம்- ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
மோடியில் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை எதிர்த்தும், மக்களை தவிக்க விடும் மத்திய அரசை கண்டித்தும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் மு.க.ஸ்டாலின் மனிதச்சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைநகரங்களில் செயலாளர்கள் தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி, கடந்த 8ஆம் தேதி ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, ரூபாய் நோட்டு பிரச்னையால் பொதுமக்கள் நாள்தோறும் பலவித துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இன்றுடன் வங்கிகளை பணத்தை மாற்றுவதற்கான காலக்கெடு முடிகிறது. இனி வங்கிகளில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், ஒரு சாரார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக எதிர்கட்சியான திமுக-வும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
திமுக மனிதச்சங்கிலி
தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்க, உடனடியாக மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி, திமுக சார்பில் இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது.
திமுக தொண்டர்கள்
மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் திமுகவினர், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.
ஸ்டாலின் தொடங்கி வைப்பு
சென்னை புரசைவாக்கத்தில் மனிதச்சங்கிலி போராட்டத்தை திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் தொடங்கிவைத்தார். திமுகவினர் கை கோர்த்து 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகோர்த்து நிற்கின்றனர்.
தயாநிதி மாறன் பங்கேற்பு
இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் தயாநிதி மாறன், எம்.எல்.ஏக்கள் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் தொண்டர்களுடன் கரம் கோர்த்து நிற்கின்றனர். தாசாபிரகாஷ், அயனாவரம் சாலை வரை பல கிலோ மீட்டர் நீளத்திற்கு மனிதச்சங்கிலி நீண்டுள்ளது. பல பகுதிகளுக்கும் சென்றும் ஸ்டாலின் மனிதசங்கிலி போராட்டத்தை பார்வையிட்டார்.
மாவட்ட தலைநகரங்களில் மனிதச்சங்கிலி
திண்டுக்கல்லில் ஐ. பெரியசாமி தலைமையிலும், கோவையில் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலும் பல கிலோமீட்டர் நீளத்திற்கு மனிதச்சங்கிலி போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்றுள்ளனர். திருச்சியில்ர கே.என் நேரு தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
கருணாநிதி பார்வையிடவில்லை
ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கும் கருணாநிதி, மனிதச்சங்கிலி போராட்டத்தைக் காண வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.