தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் கடும் அவதி - பிரசாதம் வாங்க முடியாமல் தவிப்பு
500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் கோவில்களில் பக்தர்கள் பிரசாதம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
ராமேஸ்வரம்: 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு திடீர் தடை விதித்துள்ளதால் வெளியூர்களில் கோவிலுக்குச் சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோவில்களில் தரிசன டிக்கெட் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் அதிக அளவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்துவார்கள் என்பதால், தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் உண்டியல்களில் விரைவாகவே திறக்கப்பட்டன.
பொதுவாக தமிழகக் கோவில்களில் உள்ள உண்டியல்கள், முழுவதும் நிரம்பினால் மட்டுமே திறக்கப்படும்.கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்தாலும் உண்டியல்கள் திறக்கப்படும்.திறக்கப்படும் உண்டியல்கள்,அதிலுள்ள பணம் எண்ணி முடிக்கப்பட்ட பின்னர், மீண்டும் காலியாக வைக்கப்படும்
முருகனின் அறுபடை வீடுகளிலும் முன்னதாகவே உண்டியல்கள் திறக்கப்பட்டுள்ளன.கருப்பு பணம் வைத்திருக்கும் சிலர்,வங்கியில் மாற்ற முடியாத பணத்தை கோவில் உண்டியல்களில் செலுத்தலாம் என கோவில் நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.
பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு உரிய சில்லரை கிடைக்காததால் சிரமத்திற்காளாகினர். மலை மீதுள்ள பழனி முருகன் கோயிலுக்கு செல்ல விஞ்ச் நிலையத்தில் திரண்ட பக்தர்கள் உரிய சில்லரை இல்லாததால் டிக்கெட் எடுக்க முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால் சிரமத்திற்குள்ளாகினர்.
அதேபோல மற்றொரு புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. தரிசன டிக்கெட் வாங்கவும், பிரசாதங்கள் வாங்கவும் 100, 50 ரூபாய் சில்லறையாக கேட்டதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த தடை காரணமாக தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. குறிப்பாக சென்னையிலுள்ள பல கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த கோவில்களின் நிர்வாகத்தினர் தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தடையினால் கோவில் அன்னதான திட்டங்களுக்கு உதவி செய்பவர்களும் பணம் செலுத்த தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.