மாட்டுக்கறி விற்கலைனா.. நாங்க கடை போடுவோம்! ஆம்பூர் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை -சீறும் விசிக
ஆம்பூர்: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆம்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. மனித ஒருமைப்பாட்டுக்காக பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் எல்லோரும் வந்து சாப்பிட வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுவாக ஆம்பூர் பிரியாணி இந்தியா முழுக்க பிரபலம். பல மாநிலங்களில் இருந்து கூட இங்கு வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு செல்வார்கள்.

பிரியாணி
மக்கள் எல்லோரும் வந்து ஒன்றாக சாப்பிட வேண்டும். ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். ஒருமைப்பாடு அவசியம் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பிரியாணி திருவிழா நடைபெற உள்ளது. தமிழர்கள் மத்தியில் பிரியாணி இப்போது மாநில உணவு போல ஆகிவிட்டது. பெரும்பாலானோருக்கு பிடித்தமான உணவாக பிரியாணி மாறிவிட்டது.

சமூக வலைத்தளம்
பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் என்று எதை திறந்தாலும் பிரியாணி பற்றிய வீடியோக்கள்தான் அதிகம் கொட்டிக்கிடக்கின்றன. இந்த நிலையில்தான் பெரிய எதிர்பார்ப்பை இந்த ஆம்பூர் பிரியாணி திருவிழா ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்க தற்போது இந்த பிரியாணி திருவிழாவில் சர்ச்சை ஒன்றும் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்த பிரியாணி விழாவில் மாட்டுக்கறி, ஆட்டுக்கறி பிரியாணி, முயல் பிரியாணி போன்ற பிரியாணி வகைகள் மட்டுமே கொடுக்கப்பட உள்ளதாம்.

ஆம்பூர் பிரியாணி
ஆம்பூர் பிரியாணி கடைகளில் பொதுவாக பீப் பிரியாணியும் பிரபலம். ஆனால் இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி இங்கு மாட்டுக்கறி தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற வகை பிரியாணிகளை திருவிழாவில் விற்கலாம். ஆனால் மாட்டுக்கறி விற்க கூடாது என்று மாவட்ட ஆட்சி நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

விமர்சனம்
இணையத்தில் இதையடுத்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மாட்டுக்கறி தடை செய்ய ஆம்பூர் என்ன வடஇந்தியாவிலா இருக்கிறது என்று நெட்டிசன்கள் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழ்நாட்டில் எந்த உணவையும், யாரும் சாப்பிடலாம். உங்களுக்கு விருப்பம் உள்ள உணவை யாரும் தடுக்க முடியாது. உங்களுக்கு விருப்பம் இல்லாத உணவை யாரும் திணிக்கவும் முடியாது. இந்த தடையை வாபஸ் வாங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

விசிக
இந்த நிலையில் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியும் இடம்பெற வேண்டும். இந்த தடையை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே திருவிழா நடக்கும் பகுதிக்கு எதிரே மாட்டிறைச்சி பிரியாணி வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வோம் என்று விசிக தெரிவித்துள்ளது. விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணை செயலாளர் ஓம்பிரகாஷ் இது தொடர்பாக கோட்டாட்சியர் காயத்ரியிடம் மனு அளித்துள்ளார்












Click it and Unblock the Notifications