ஆட்கள் சேர்க்க முடியவில்லை... திணறும் தினகரன் பிரசாரம்.. ஒரு ரவுண்ட் அப்!
வென்றால் மட்டுமே ஆட்சியும் கட்சியும் நீடிக்க வாய்ப்புண்டு என்ற நிலையில் தானே களம் இறங்கியிருக்கும் தினகரன் ஆரம்பத்தில் இருந்தே கூட்டம் காட்ட முடியாமல் திணறுகிறார்.
தேர்தல் வேலைகளுக்காக அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், சென்னை எம்.எல்.ஏக்கள் என்று 153 பேரை நியமித்தார் தினகரன். அவர்களில் பாதி பேர் கூட பணி செய்ய முன்வரவில்லை.
பதவியைத் தக்க வைத்துக்கொள்ள அமைச்சர்கள் மட்டுமே திரண்டார்கள். மற்றவர்கள் பள்ளி மாணவர்கள் போல உடம்பு சரியில்லை சாக்கை சொல்லி ஒதுங்கி விட்டார்கள்.
பேசத் தெரியலை
பிரசாரத்தில் பேசுவதிலும் தினகரன் தடுமாறுகிறார். ‘நான் ஜெயித்தால் ஆர்கே நகரை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவேன்' என்று சொல்ல ஷாக் ஆனார்கள் கட்சி நிர்வாகிகள். இப்போது ஜெயலலிதா பாணியில் ஸ்க்ரிப்டாக இல்லாமல் பாய்ண்ட் பாய்ண்டாக முன்கூட்டியே எடுத்து தரப்படுகிறது.
சசிகலாவை மறந்தாச்சு
பிரசாரம் துவங்கியதில் இருந்து இதுவரையிலும் ஒரு இடத்தில் கூட சின்னம்மா பெயரை உச்சரிக்கவில்லை. சசிகலாவின் பெயரோ படமோ எந்த பிரசாரத்திலும் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
தியாகத் தலைவி
மூச்சுக்கு முன்னூறு முறை தியாகத் தலைவி என்று சொல்லும் அமைச்சர்களே சசிகலாவை நினைவுபடுத்த விரும்பவில்லை. தினகரன் பேசும்போது தனது பேச்சில் அதிகமாக ஹைலைட் செய்வது எம்ஜிஆரைத் தான்.
ஒப்புக்கு ஜெ. பெயர்
ஜெயலலிதாவைக் கூட ஒப்புக்கு சொல்லி ஓரிரு வார்த்தைகளில் நிறுத்திவிடுகிறார். ஜெயலலிதாவை இழுத்தால் அவரைக் கொன்றது யார் என்று மக்கள் மனதில் அலையடிக்கும். எதற்கு வேண்டாத வேலை என்று ஜெயலலிதாவையே இருட்டடிப்பு செய்கிறார் தினகரன்.
நின்று நடந்து மட்டுமே பேச்சு
சிறிது தூரம் திறந்த வேனில் போகிறார். சிறிது தூரம் நடந்து போகிறார். இவையெல்லாம் ஹைஜீனிக்கான இடங்களில் மட்டும் தான். சேரிப்பகுதி, அசுத்தமான காற்றுள்ள இடங்களில் எல்லாம் கார் கண்ணாடியைக் கூட இறக்க மறுக்கிறார். முதல் நாள் ஆர்வக் கோளாறில் நடந்தே போனதில் நிறைய உடல்நலக் குறைவு பிரச்னைகள் ஏற்பட்டதால் இப்போது ஏரியா பார்த்துதான் காலை வைக்கிறார்.
ஏனோ தானோ வேலை
தினகரன் பெரிதும் நம்பும் கட்சி நிர்வாகிகள் ஏனோ தானோ என்றுதான் வேலை செய்கிறார்கள். ஆள் இருந்தால் மட்டுமே வேலை நடக்கிறது தினகரன் அந்த பக்கம் நகர்ந்தால் ஓபி அடிக்கிறார்கள். கிட்டத்தட்ட தினகரன் வந்துவிடக்கூடாது என்ற மனநிலையில் தான் வேலை பார்க்கிறார்கள். இது தினகரனுக்கு தெரிகிறதா என்று கூட புரியவில்லை.
கலக்கத்தில்
மூன்று நாளைக்கு ஒருமுறை தொகுதி மக்களின் மனநிலையை பிரதிபலிக்க வேண்டும் என்பது உளவுத்துறைக்கு விடப்பட்ட உத்தரவு. இதுவரை வந்த ரிப்போர்ட் எதுவுமே தினகரனுக்கு ஆதரவாக இல்லை. எனவே கலக்கத்தில் தான் இருக்கிறது தினகரன் தரப்பு.