போட்டோ, வீடியோ எடுக்கவில்லை என்ற தினகரனிடம் ஜெ.வீடியோ கிடைத்தது எப்படி? விசாரணை கமிஷனில் புகார்!
ஜெயலலிதா மரணம் குறித்து டிடிவி தினகரன் முரணாக பேசுகிறார் என ஆறுமுகசாமி கமிஷனில் மனோஜ் பாண்டியன் புகார் அளித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து டிடிவி தினகரன் முரணாக பேசுகிறார் என ஆறுமுகசாமி கமிஷனில் மனோஜ் பாண்டியன் புகார் அளித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் முதன் முறையாக அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் நேற்று ஆஜரானார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் வந்திருந்தனர்.
ஜெயலலிதா சிகிச்சைக்காக போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரையிலும், சிகிச்சையில் இருந்த போதும் என்னென்ன தடயங்கள் மறைக்கப்பட்டன என்பது குறித்தும், டி.டி.வி.தினகரனின் முரண்பட்ட கருத்துகள் பற்றியும், வீடியோ ஆதாரங்களுடன் காலை 10½ மணி முதல் மதியம் 2½ மணி வரை 4 மணி நேரம் மனோஜ் பாண்டியன் ஆறுமுகசாமி கமிஷனில் வாக்குமூலம் அளித்தார்.
சசி மீது சந்தேகம் கொண்ட ஜெ.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா வெளியேற்றப்பட்டு மீண்டும் போயஸ் கார்டனில் சேர்க்கப்பட்டபோது அவர் மீதான ஜெயலலிதாவின் சந்தேகப்பார்வை எப்படி இருந்தது என்பது குறித்தும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்தும் விரிவாக விசாரணை கமிஷனில் தெரிவித்ததாக கூறினார்.
வீடியோ கிடைத்தது எப்படி?
மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது புகைப்படமோ, வீடியோவோ வெளியிடப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் தந்தி டி.விக்கு அளித்த பேட்டியில் புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக்கூடாது என்று ஜெயலலிதா தெரிவித்ததால் எடுக்கவில்லை என்று கூறி உள்ளார் என்ற மனோஜ் பாண்டியன், பின்னர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ தினகரனுக்கு எப்படி கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
டிஎஸ்பி, டாக்டர்கள்
இதுகுறித்து விசாரணை கமிஷனில் தெரிவித்திருப்பதாக கூறிய மனோஜ்பாண்டியன், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தார். மேலும் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவமனைக்கு தொலைபேசியில் பேசிய டி.எஸ்.பி ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
எதற்காக அகற்றப்பட்டது?
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு அங்கிருந்த 27 கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட யார் காரணம்? எதற்காக அகற்றப்பட்டது? பாதுகாப்பு படை வீரர்கள் ஏன் உடன் செல்லவில்லை? ஜெயலலிதாவை பார்க்க அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவை ஏன் அனுமதிக்கவில்லை என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று விசாரணை கமிஷனில் வலியுறுத்தியிருப்பதாக மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
மீண்டும் சூடுபிடித்துள்ளது
மனோஜ் பாண்டியன் எழுப்பியிருக்கும் இந்த சந்தேகங்களால் ஜெயலலிதா மரண விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதிமுக சார்பில் இருந்து முதல் முறையாக மனோஜ்பாண்டியன் ஆஜராகியிருப்பது குறிப்பிடத்தக்கது.