ஒரு துரோகி இன்னொரு துரோகிக்கு பதவி கொடுத்துள்ளார்- தினகரன்
ஒரு துரோகி இன்னொரு துரோகிக்கு பதவி கொடுத்து தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: அவை முன்னவராக ஓபிஎஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். துரோகத்துடன் கை கோர்த்துள்ளார் துரோகி எடப்பாடி பழனிச்சாமி என்றும் கூறியுள்ளார் தினகரன்.
தமிழக சட்டசபை வரும் 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை முன்னவராக இருந்த செங்கோட்டையனுக்கு பதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையின் முன்னவராக நியமிக்கப்படுவதாக பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக இருந்தார். பின்னர் அதிமுக இருஅணிகளாக பிரிந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவை முன்னவராக செயல்பட்டு வந்தார். தற்போது அணிகள் இணைந்ததை தொடர்ந்து பன்னீர்செல்வம் மீண்டும் அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆர்.கே. நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் கடுமையாக விமர்சித்தார். முதல்வர் பதவியில் அமரவைத்த சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார்.
அப்படிப்பட்டவர், கட்சி சின்னத்தையும், கொடியையும் முடக்கிய துரோகி ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளார். செங்கோட்டையன் வயதில் மூத்தவர், அனுபவம் வாய்ந்தவர். அவரை நீக்கிவிட்டு மீண்டும் முன்னவராக ஓ.பன்னீர் செல்வத்தை நியமித்துள்ளார். இது பதவியை தக்க வைப்பதற்காக செய்யப்பட்ட செயல் என்று கூறினார் தினகரன்.
சசிகலா சிறைக்கு செல்லாமல் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? துரோகியுடன் கைகோர்த்துள்ளார் துரோகி எடப்பாடி பழனிச்சாமி என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.