தினகரன் வீட்டில் டெல்லி போலீஸ்.. தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!
சென்னை: டிடிடிவி தினகரனிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளிக்க வந்த டெல்லி போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி.தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது கடந்த 17ம் தேதி தெரியவந்தது.
இதையடுத்து டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை இன்று டெல்லி உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையிலான டெல்லி போலீஸ் குழு எடுத்துக் கொண்டு சென்னை வந்தனர்.
அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்குச் சென்ற ஷெராவத் குழு தினகரனைச் சந்தித்து சம்மனை அளித்தனர். பின்னர் அவரை டெல்லிக்கு வருமாறும் அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில் தினகரன் வீட்டின் முன்பு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்களில் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீஸாரும் மற்றவர்களும் சேர்ந்து தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.
இந்த விவகாரத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது