அதிமுக ஆபீசுக்கு போனா கைது செய்வாங்களோ? பீதியுடன் விசாரிக்கும் தினகரன்
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றால் தம்மை போலீசார் கைது செய்வார்களா என விசாரித்து வருகிறாராம் தினகரன்.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றால் கைது நடவடிக்கை இருக்குமா? என பீதியுடன் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரித்து வருகிறாராம் தினகரன்.
அ.தி.மு.கவின் மூன்று அணிகளுக்குள்ளும் நாள்தோறும் நடக்கும் காட்சிகளை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் தொண்டர்கள். தினகரனை ஓரம் கட்டுவதற்காக, அணிகள் இணைப்பு என்ற பெயரில் அமைச்சர்கள் கூடிக் கூடிப் பேசினாலும், பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை.
இன்று காலை ஓபிஎஸ் அணியின் சண்முகநாதன் அளித்த பேட்டி, எடப்பாடி பழனிசாமி தரப்பைக் கலங்க வைத்திருக்கிறது. எடப்பாடி பக்கம் வாருங்கள் என ஐந்து கோடி ரூபாய் பேரம் பேசுகிறார்கள்' என பேட்டியளித்தார் சண்முகநாதன்.
விரிசல் அதிகரிப்பு
இதன்மூலம் இரு அணிகளுக்குள்ளும் விரிசல் அதிகமாகி வருகிறது. கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிச்சாமியே கவனித்து வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்களும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
அதிமுகவை கைப்பற்ற...
அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் தினகரன். அவருடைய நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
பீதியுடன் விசாரிக்கும் தினகரன்
கட்சி அலுவலகத்துக்கு நான் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என தினகரன் கூறியதை வைத்து, காவல்துறையை உஷார்படுத்தியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. அதேபோல் கட்சி அலுவலகத்துக்கு வந்தால், கைது நடவடிக்கை இருக்குமா? என தனக்குத் தெரிந்த ஐ.பி.எஸ் வட்டாரத்தில் தீவிரமாக விசாரித்து வருகிறாராம் தினகரன்.
'மணி' அமைச்சர்கள்
அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் சமரச முயற்சிகளை எட்டுவதற்கு தினகரன் பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வந்தாலும், கொங்கு அமைச்சர்கள் இதற்கு உடன்படவில்லை. எதுவாக இருந்தாலும் கொங்கு மண்டலத்தின் இரண்டு 'மணி'களிடம் ஆலோசித்துத்தான் முடிவெடுக்கிறார் முதல்வர் எடப்பாடி. மேலும் தமிழக ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவர் சொல்வதையே 'வேத'வாக்காக கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.