கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்யுங்கள்- சாமளாபுரத்தில் போராட்டம்!- வீடியோ
திருப்பூர்: டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டபோது, ஈஸ்வரி என்ற பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சாமளாபுர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் சாமளாபுரத்தில், டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அந்த ஊர்மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏடிஎஸ்பி பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். காவல்துறையின் அராஜகம் தமிழகம் முழுவதும் கடும் கண்டனத்துக்கு ஆளானது.
சாமளாபுரம் மக்கள், காவல்துறை வன்முறையைக் கண்டித்தும் ஈஸ்வரியை அறைந்ததைக் கண்டித்தும் போராட்டம் நடத்தினர். அப்போது ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என போராடினார்கள்.
மேலும் சாமளாபுரத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். செவித்திறன் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி கூறுகையில்,''டாஸ்மாக் கடை வேண்டாம் என்று தானே போராட்டம் நடத்தினோம். ஆனால் காவல்துறை எங்கள் மீது தடியடி நடத்தியது. என்னை அறைந்ததில் என் காது கேட்கவில்லை.
என்னை அறைந்த பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ஆனால் ஒருபோதும் சாமளாபுரம் பேரூராட்சிக்குள் டாஸ்மாக் வரக் கூடாது. அதனால் இங்கு விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிர் இழந்தனர். ஆகையால் டாஸ்மாக்கை ஒருபோது நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என உறுதியாகக் கூறினார்.