சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் திவாகரன்
வருமான வரித்துறை அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகிறார் திவாகரன்.
சென்னை: வருமான வரித்துறையின் சம்மனை ஏற்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று சென்னை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகிறார்.
சசிகலா குடும்பத்தினர் 355 பேரை இலக்கு வைத்து 2,000 வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் சசிகலா குடும்பத்தினர் இமாலய வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகள்
இந்த வரி ஏய்ப்புக்காக 50க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை உருவாக்கி இருந்ததும் அம்பலமானது. இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா, சசிகலா தம்பி திவாகரன் ஆகியோரின் வீடுகள், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை, சசிகலாவின் கொடநாடு கிரீன் டீ எஸ்டேட் என 190 இடங்கள் வருமான வரி சோதனையில் சிக்கியது.
6-வது நாளாக சோதனை
இதில் விவேக், கிருஷ்ணப்பிரியா வீடுகளில் 5 நாட்கள் சோதனை நடைபெற்றது. கொடநாடு எஸ்டேட்டில் 6-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றது.
கிடுக்குப்பிடி விசாரணை
சென்னையில் விவேக் வீட்டில் தொடர்ந்து 5 நாட்கள் விசாரணை நடத்திய பின்னர் நேற்று அவரை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 4 மணிநேரம் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
துருவி துருவி விசாரணை
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகிறார். அவரிடமும் துருவி துருவி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.