தீபாவளிக்கு சர்க்கரை, பாமாயில்… நவ-1ம் தேதி ரேஷன் கடையில் வாங்கிக்கலாம்
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி முதல் வெள்ளிக்கிழமை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை) வருகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சர்க்கரை, அரிசி, பருப்பு, பாமாயில் போன்றவற்றை வாங்குவதற்கு ரேஷன் கடைகளையே நம்பி வாழ்கிறார்கள்.
பொதுவாக, முதல் வெள்ளிக்கிழமையன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஞாயிறன்று கடைகள் திறந்திருக்கும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 2-ந் தேதி வருகிறது.இதை கருத்தில் கொண்டு, நவம்பர் மாதம் 1-ந் தேதி, முதலாவது வெள்ளிக்கிழமை என்றபோதிலும், அன்றைய தினம், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்திருக்க வேண்டும் என்றும், அத்துடன், இடைவெளியின்றி நாள் முழுவதும் பொருட்களை வழங்கவேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கப்படுகிற 20 கிலோ விலையில்லா அரிசி (புழுங்கல் அரிசி, பச்சரிசி) உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்பட ரேஷனில் வழங்கும் அனைத்து பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.
வழக்கமாக, ஒவ்வொரு மாதமும் 25-ந் தேதி தான் அடுத்த மாதத்துக்கான உணவுப்பொருட்கள் கோடவுன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும் என்ற நோக்கதில், ரேஷன் கடைகளில் எந்த பொருளும் இல்லை என்று சொல்லக்கூடாது என்பதற்காக, இந்த மாதம் 21-ந் தேதியே, கோடவுன்களில் இருந்து அரிசி, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில், கோதுமை உள்பட ரேஷனில் வழங்கும் அனைத்து உணவுப்பொருட்களும் எல்லா ரேஷன் கடைகளுக்கும் அனுப்பிவைக்கவேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 21-ந் தேதியில் இருந்தே உணவுப்பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.எனவே, ரேஷன் கடைகளில் 1-ந் தேதி அன்றே, அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் போன்றவற்றை பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம்.
பொதுவாக, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் அவர்கள் தேவைக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் போன்றவற்றை சப்ளை செய்கிறோம். கார்டுதாரர்கள் அனைவருக்கும் இல்லை என்று சொல்லாமல் பொருட்களை வழங்க வேண்டும்.
எஸ்.எம்.எஸ், ஆன்லைன் புகார்
எந்த கடையிலாவது முறையாக பொருட்கள் வழங்கவில்லை என்றால், 9445464748., 7299998002., 7299008002., 8680018002., 8680028003., 7200018001., 7200048002 ஆகிய மொபைல் எண்களில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் புகார் தெரிவிக்கலாம்.
அல்லது 044 28592828., 044 25672224 ஆகிய ஹெல்ப் லைன் தொலைபேசிகளில் புகாரை தெரிவிக்கலாம். அல்லது [email protected], [email protected], [email protected], ஆகிய இ-மெயில் அல்லது www.consumer.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது மட்டுமின்றி, எந்த கடையிலாவது பாமாயில் இல்லை, சர்க்கரை இல்லை என்று புகார் வந்தால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.