தானாய் எல்லாம் மாறும் என்பது...
- கதிர்வேல்
தேமுதிக 113
பா ம க 70
பி ஜே பி 51
மொத்தம் 234.
இன்னும் கட்சிகள் வந்தால் பிஜேபி தன் கோட்டாவில் இருந்து கொடுக்கும். இப்படி பேரம் முடிந்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தலைப்பு செய்தி. ஜெயா மேனன் சீனியர் நிருபர். நெருப்பில்லாமல் புகைக்க மாட்டார்.
கேப்டனின் மச்சான் சுதீஷ், பிஜேபி சீஃப் அமித் ஷா டெல்லியில் பேசி உடன்பட்டதாக சொல்கிறது செய்தி. தேர்தல் செலவுக்கு பிஜேபி எவ்வளவு கொடுக்கும் என்பது மட்டும் முடிவாகவில்லையாம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏற்படுத்திய கூட்டணியை அப்படியே தக்க வைத்துக் கொள்வது பிஜேபியின் திட்டம்.
ஜெயலலிதா விருப்பமும் அதுதான்.
மக்கள் நல கூட்டணியில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் விஜயகாந்த். இன்னொரு பக்கம் பிஜேபி தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு விஜயகாந்த் வாழ்த்து சொல்கிறார்.
அவர் இப்படி எல்லாம் செய்வது திமுகவை பயமுறுத்தி அதிக சீட் வாங்கதான் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.
நம்மகிட்டதான் வந்தாகணும்; ரொம்ப தொங்க வேண்டாம் என்று அறிவாலயத்தில் சொன்னாராம்.
கேப்டனை பற்றி தளபதிக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
அம்மாவுக்கு இவர்கள் எல்லோரை பற்றியும் அதிகமாக தெரியும்.
இந்த தடவை எதிர்ப்பு ஓட்டு அதிகம் என்பது தெரியும். அதை பிரித்தால்தான் நாம் திரும்ப வர முடியும் என்பது தெரியும்.
அது தானாக நடக்கும் என்று அவர் மனப்பால் குடிக்கவில்லை. ஆறு மாதங்கள் முன்பே வேலையை ஆரம்பித்து விட்டார். பலன் கிடைப்பதை பார்த்தும் வருகிறார்.
மதுரையில் மநகூ மாநாட்டுக்கு மாபெரும் கூட்டம் என செய்தி கிடைத்தபோது அதிகம் மகிழ்ந்தவர் அம்மா.
அமித், விஜயகாந்த், ராமதாஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது அதிகம் மகிழ போவதும் அம்மா.
ஈகோவை எப்போது இறக்கி வைக்க வேண்டும் என்று அம்மாவுக்கு தெரிந்திருக்கிறது.
திமுகவை பார்த்தால் பாவமாக இருக்கிறது!