சாமி கும்பிட வந்த இடத்துலயும் பேட்டியா...கடுப்பான கேப்டன்!
கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்தவிட்டார்.
வேலூர் : குடியாத்தம் அருகே செம்பேடு கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தோடு கலந்துகொண்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்துள்ள செம்பேடு கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மகா முனீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜைகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், மற்றும் சுதீஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் கும்பாபிஷேகத்திற்காக கொண்டு வரப்பட்ட புனித நீரை விஜயகாந்த் அர்ச்சகர்களிடம் கொடுத்த பின்னர் இவை கும்பத்திற்கு ஊற்றப்பட்டது. கும்பாபிஷே விழாவில் பங்கேற்க வந்த விஜயகாந்திற்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து ராஜமரியாதை செலுத்தப்பட்டது.

களத்தில் குதித்த கேப்டன்
உடல்நலக் குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விஜயகாந்த் தவிர்த்து வந்தார். இதனையடுத்து கீழடியில் அகழ்வாய்வுப் பணிகளை ஆய்வு செய்த போது நீண்ட நாட்களுக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இஃப்தார் விருந்தில் கலக்கல்
கடந்த 20ஆம் தேதி சென்னையிலுள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவை கடுமையாக விமர்சித்து பேசினார். மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று சொல்லும் மத்திய அரசு ஆடு, கோழி உள்ளிட்டவற்றிற்கும் தடை விதிக்கட்டுமே என்று விளாசினார்.

ஆச்சரியப்பட்ட தொண்டர்கள்
கடந்த மாதத்தில் கேப்டன் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலின் போதே தமிழக அரசியல் நிலவரம் குறித்து தெளிவாக பேசி தொண்டர்களை ஆச்சரியப்படுத்தினார் விஜயகாந்த். உடல்நலம் தேறி வரும் அவர் பழைய தெம்போடு வெளியே வரத் தொடங்கியுள்ளது தொண்டர்களின் உற்சாகத்தை கூட்டியுள்ளது.

புத்துணர்ச்சி
இந்நிலையில் பிரேமலதாவின் சொந்த ஊரான செம்பேடு கிராமத்தில் இன்று கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டார். அவருடன் பிரேமலதா, அவருடைய மகன் மற்றும் சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வைரல் போட்டோ
இது குடும்ப விழா என்று குறிப்பிட்ட விஜயகாந்த், குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கும் போது பேட்டி எடுக்க வேண்டாம் என்று பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார். இதனிடையே விஜயகாந்த் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications