அரசியலில் போணியாகவில்லை.. மீண்டும் சினிமா பக்கம் ஒதுங்கும் விஜயகாந்த்
ஆயிரம் கனவுகளோடு அரசியலுக்கு வந்த கேப்டன் இனிமேல் புரட்சி கலைஞர் என்ற பட்டத்தோடு சினிமாவில் மீண்டும் வலம்வருவாரா என்ற எதிர்பார்ப்பையே ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மாற்று சக்தியாக அரசியலில் உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
2005-ம் ஆண்டு மதுரையில் லட்சக்கணக்கான மக்களுக்கிடையே தே.மு.தி.க.வை துவங்கிய விஜயகாந்த், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு தன்னை மாற்று என அறிமுகப்படுத்திக்கொண்டார். மாற்று தேவைப்பட்ட மக்களும் அப்படித்தான் அவரை பார்த்தனர்.
கட்சி துவங்கிய சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வந்த நிலையில் யாருடனும் அணி சேராமல் கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என அறிவித்த விஜயகாந்த் தனித்தே 232 தொகுதிகளில் போட்டியிட்டார்.

செல்வாக்கு
பாமக செல்வாக்குமிக்கதாக இருந்த விருதாச்சலத்தில் விஜயகாந்த் போட்டியிட்டு வென்றார். 231 தொகுதிகளில் தே.மு.தி.க. தோற்றபோதிலும் அக்கட்சி வாங்கிய வாக்குகள் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை வரவிடாமல் செய்தன.

வாக்கு சதவீதம்
குறிப்பாக 128 தொகுதிகளில் வெற்றி தோல்வியை மாற்றி அமைத்தது தே.மு.தி.க. முதல் முறை சந்தித்த இந்த தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற வாக்குகள் 8.45 சதவீதம் என்பதால் அது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

லோக்சபா தேர்தல்
2009 நாடாளுமன்ற தேர்தலின் போதும் தனித்து போட்டியிட்டது தேமுதிக. ஒரு தொகுதியில் கூட டெபாசிட்டையும் பெறவில்லை என்றபோதிலும் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி கிட்டத்தட்ட 10 சதவீதத்தை அடைந்து வளர்ந்திருந்தது. எனவே தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்ற பட்டியலில் தொடர்ந்து இருந்து வந்தது.

திமுக எதிர்க்கட்சியாகவில்லை
அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வென்றிருந்தது. ஆனால் குறைந்த இடங்களில் போட்டியிட்டதால் வாக்கு சதவீதம் 7.88 சதவீதமாக குறைந்திருந்தது. ஆண்ட தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தவித்தது. இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்பட்டவர் விஜயகாந்த்.

இடைத்தேர்தல்
இந்த நிலையில்தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடனும், பிறகு சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியோடும் கூட்டணி வைத்து ஒரு தொகுதியிலும் வெல்லமுடியாமல் சறுக்கியது விஜயகாந்த் கட்சி. தஞ்சை, அவரக்குறிச்சி திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்களிலும் படுதோல்வியடைந்தது தேமுதிக. இந்த நிலையில்தான் மகன் சண்முகபாண்டி நடிப்பில் மதுரவீரன் என்ற திரைப்படத்தின் சூட்டிங் ஆரம்பித்துள்ளது.

மகன் சினிமா
இவர் ‘சகாப்தம்' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படம் சரியாக போகவில்லை. இதனிடையேதான் மதுரவீரன் படத்தின் சூட்டிங் ஆரம்பித்துள்ளது. இதில் விஜயகாந்த்தும் நடிக்க உள்ளாராம். ஆயிரம் கனவுகளோடு அரசியலுக்கு வந்த கேப்டன் இனிமேல் புரட்சி கலைஞர் என்ற பட்டத்தோடு சினிமாவில் மீண்டும் வலம்வருவாரா என்ற எதிர்பார்ப்பையே ஏற்படுத்தியுள்ளது, அவரது அரசியல் புள்ளி விவரங்கள்.












Click it and Unblock the Notifications