லோக்சபா தேர்தல்: கூட்டணி பற்றி விஜயகாந்த் இன்று அறிவிப்பு?
உளுந்தூர்பேட்டை: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று உளுந்துர்பேட்டையில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வந்தன. ஆனால் திமுக, காங்கிரஸுடன் தேமுதிக கூட்டணி அமைக்காது எனத் தெரிகிறது,
மேலும் உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெறும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் தொண்டர்களின் கருத்தைக் கேட்டு அறிவிப்பதாக விஜயகாந்த் தெரிவித்தும் வந்தார்.
அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு
அதே நேரத்தில் அதிமுக, சமத்துவ மக்கள் கட்சி தவிர்த்து திமுக உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் தேமுதிக சார்பில் மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநாட்டில் பேச்சாளர்களாக அல்லாமல் வெறும் பங்கேற்பாளர்களாக மட்டுமே வருமாறு அழைத்ததால் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தங்கள் நிர்வாகிகளை அனுப்புவதில்லை என்று முடிவு செய்துள்ளன.
கூட்டணி அறிவிப்பா?
அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, அந்த மாநாட்டில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவது சரியாக இருக்காது என்றும் தேமுதிவின் ஒரு தரப்பினர் விஜயகாந்திடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொகுதி உடன்பாடு இல்லை?
இதனால் மாநாட்டில் விஜயகாந்த் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பாஜகவுடன் தொகுதி உடன்பாடு எதுவும் எட்டாத நிலையில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடுவது சரியாக இருக்காது என்றும் தேமுதிக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
இன்று முடிவு?
அதே நேரத்தில் உளுந்தூர்பேட்டை மாநாட்டில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன் என்று திருப்பதி கோயிலுக்குச் சென்றிருந்தபோது விஜயகாந்த் அறிவித்திருந்தார். இதனால் இன்றைய மாநாட்டில் கூட்டணி பற்றி விஜயகாந்த் என்ன முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.