திமுகவிற்கு தாவும் தேமுதிகவினர்... கடிவாளம் போடுவாரா "பீனிக்ஸ்" விஜயகாந்த்
சென்னை: தேமுதிகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சென்னை மாநகராட்சியின் 20வது வார்டு உறுப்பினருமான ஏ.வி.ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானார். ஏ.வி. ஆறுமுகத்தைப் போல இன்னும் பலர் வேறு கட்சிக்குத் தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளதால் அவர்களை தடுப்பது எப்படி என்று ஆலோசனை செய்து வருகிறாராம் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சட்டசபை தேர்தலில் திமுக உடன் தேதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று பல மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் வைகோ ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிட்டது. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேமுதிகவில் சலசலப்பு ஏற்பட்டது.
தேர்தலுக்கு முன்பாக தேமுதிகவில் இருந்து விலகி பலர் திமுகவில் இணைந்தனர். பல மாவட்ட செயலாளர்கள் தங்களில் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர்.
தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பாக கட்சியில் இருந்து சில மாவட்ட செயலாளர்கள் பிரிந்து சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி திமுக ஆதரவுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.
தேர்தலில் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விஜயகாந்த் தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததே தோல்விக்கு காரணம் என்று பலரும் தெரிவித்துள்ளனர். மக்கள் நலக்கூட்டணியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் பலரும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றும் சாம்பலில் இருந்து உயிர்தெழும் பீனிக்ஸ் பறவை போல மீண்டு எழுவேன் என்று சமீபத்தில் காரைக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய விஜயகாந்த், கட்சித்தாவும் மனநிலையில் பலர் இருப்பதை அறிந்து மீண்டும் நிர்வாகிகளை சந்தித்து உருக்கமாக பேசினாராம். ஆனால் இந்த பேச்சு எத்தனை நிர்வாகிகளை உருக்கியது என்று தெரியவில்லை.
தேர்தலுக்கு முன்பு விஜயகாந்த் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ரூபாய் 10 லட்சம் தருவதாக சொல்லியிருந்தார். பிறகு ரிசல்ட்டுக்கள் வந்ததும் தருவதாகச் சொல்லியிருக்கிறார். தேர்தலில் தோற்ற பிறகு கட்சியினர் பலர் கடன்சுமையைச் சொல்லி பணம் கேட்டிருக்கிறார்கள்.
அப்போதும் தந்து விடுவதாகத்தான் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது, எங்கிட்ட காசில்ல... என்று சொல்லிவிட்டாராம். இதனால்தான் பல நிர்வாகிகள், வேட்பாளர்கள் வரவில்லை. கூட்டத்திற்கு வந்தவர்களும் வாடித்தான் திரும்ப சென்றார்களாம்.
நேற்றைய ஆலோசனைக் கூட்டம் முடிந்தபிறகு நிர்வாகிகள் சோர்வாகி தளர்ந்துவிட்டார்கள். கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும் கூட்டணியால்தான் தோற்றோம்... திமுக-வோடு கூட்டணி வைத்திருக்க வேண்டும். அது இல்லாமல் போனதால்தான் இவ்வளவும் மோசமான தோல்வி' என்று நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விஜயகாந்த் நிர்வாகிகள் சொல்வதைக் கேட்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்யாமல் தன்னுடைய நிலைப்பாடு சரிதான் என்று பேசினாராம். இதனால்தான் கட்சியினர் கொந்தளிப்போடு உள்ளனர்.
பல நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் நிற்பதற்கான பணமோ, நம்பிக்கையோ இல்லை. எனவே, நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாகவும் தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணில சட்டசபை தேர்தல்ல 59 சீட்டும்... உள்ளாட்சியில 30% இடமும் தர்றோம்னு சொன்னாங்க... இப்ப எல்லாம் போச்சு... உள்ளாட்சி தேர்தல் எவ்ளோ முக்கியம்.. என அலுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகள். நிஜமாகவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விஜயகாந்த் அறிவித்தால் அது மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கும்.
இதனிடையே திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிகவினர் 100 பேர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் வந்தனர். அங்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை பொன்னாடை அணிவித்து மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
அப்போது மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம், திருவொற்றியூர் கே.பி.பி.சாமி, துரை மற்றும் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர். தி.மு.க.வில் இணைந்த ஏ.வி.ஆறுமுகம் சட்டசபை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டவர் ஆவார்.
ஏ.வி. ஆறுமுகத்துடன் திருவொற்றியூர், மாதவரம், மணலி பகுதிகளை சேர்ந்த கணேஷ், ராஜா, கோபால், ஜி.எஸ்.ராமன், ஏ.பி.சேகர் உள்ளிட்ட 100 பேர்வரை திமுகவில் இணைந்துள்ளனர்.
தேர்தலில் செலவு செய்த பணம் திரும்ப வராது என்று தெரிந்த உடனேயே வேட்பாளராக போட்டியிட்ட பலரும் கட்சி தாவும் மனநிலையில் இருப்பதாக கூறப்படுவதால் தேமுதிக வட்டாரம் கலகலக்கத் தொடங்கியுள்ளது.