ஓஎன்ஜிசி கதிராமங்கலத்தை விட்டு ஓடும்வரை ஓயப்போவதில்லை.. எச்சரிக்கும் விஜயகாந்த்!
ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு ஓடும் வரை ஓயப்போவதில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம்: ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு ஓடும் வரை ஓயப்போவதில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்றக்கோரியும் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக்கோரியும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கதிராமங்கலம் கிராம மக்களை சந்தித்து அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கதிராமங்கலம் கிராம மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரேமலதா கூட்டத்தினர் இடையே பேசினார்.
பாதிப்புகளை பதியவைக்கவே போராட்டம்
அப்போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பதியவைக்கவே போராட்டம் நடத்துவதாகவும், மக்களின் ஆதரவு இல்லையெனில் திட்டத்தை தூக்கியெறிய வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் கூறினார். மேலும் வெளிநாடுகளில் மக்கள் வாழாத இடங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் பிரேமலதா கூறினார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியே
அதே போல இங்கேயும் திட்டங்களை செயல்படுத்தலாம் என்ற அவர், திமுக - காங்கிரஸ் கூட்டணியே ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது என்றார். மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.
10 பேரை விடுவிக்க வேண்டும்
இதைத்தொடர்ந்து பேசிய விஜயகாந்த், கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும் என்று கூறினார். கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 10 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்ர வலியுறுத்தினார்.
ஓடும்வரை ஓயப்போவதில்லை
பிரச்னையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக கதிராமங்கலத்திற்கு தாம் வரவில்லை என்றும் விஜயகாந்த் கூறினார். கதிராமங்கலத்தில் மக்களுக்கு தெரியாமல் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறிய விஜயகாந்த், ஒஎன்ஜிசி கதிராமங்கலத்தை விட்டு ஓடும்வரை ஓயப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.