பா.ஜ.க. கூட்டணியை விட்டு விலகுகிறது தே.மு.தி.க? ஸ்ரீரங்கத்தில் தனித்துப் போட்டி?
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகக் கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுவது குறித்தும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பா.ஜ.க.வும் அங்கு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தமிழக தலைவர்கள் மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகி உள்ளது.
கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி
ஆனால் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் இதுகுறித்து தங்களது கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.விடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இது கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அமித்ஷாவை சந்திக்க மறுப்பு
அதே நேரத்தில் மோடி அரசின் பல செயல்பாடுகள் குறித்தும் விஜயகாந்த் அதிருப்தி அடைந்துள்ளார். இதன் காரணமாகத்தான் சென்னை வந்த அமித்ஷாவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்திக்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
தீவிர ஆலோசனை
அத்துடன் ஸ்ரீரங்கம் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கலாமா? என்பது குறித்தும் விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
திருச்சியில் ஆய்வு
இதனிடையே தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எம்.எல்.ஏ. திருச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து அங்குள்ள முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
2 ஆயிரம் ஓட்டு வாங்கிய பா.ஜ.க.
அப்போது, 'கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 19 ஆயிரம் வாக்குகள் பெற்றிருப்பதாகவும், அதேநேரத்தில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் பா.ஜ.க. வெறும் 2 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றதாகவும் கூறிய கட்சி நிர்வாகிகள், தனித்து போட்டியிடலாம் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனித்துப் போட்டி?
இதையடுத்து சென்னை புறப்பட்டு வந்த பார்த்தசாரதி இத் தகவலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் தனித்து போட்டியிட்டால் தமிழகத்தின் பெரிய கட்சிகளில் 3வது இடத்தை பெற முடியும் என விஜயகாந்த் நம்புவதாகத் தெரிகிறது. கூட்டணி கட்சிகளை மதிக்காத பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டுவதற்காகவும், தமிழக கட்சிகளின் 3வது பெரிய கட்சி என்ற பெயரை எடுப்பதற்காகவும் ஸ்ரீரங்கம் தொகுதியில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், இது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தே.மு.தி.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.