கூட்டம் வராததால் ஆத்திரம்.. திமுக பெண் வேட்பாளரை தாக்க முயன்ற தேமுதிகவினர்
சேலம்: சேலம் லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் உமாராணியை தேமுதிக வேட்பாளர் சுதீசின் ஆதரவாளர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. வேட்பாளர் உமாராணி இன்று வெள்ளிக்கிழமை மதியம் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள ஜாமியா மசூதி பகுதிக்கு சென்றுள்ளார். தொழுகை முடித்துக்கொண்டு வரும் இஸ்லாமிய மக்களை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்த போது, தே.மு.தி.க வேட்பாளர் சுதீஸ், தனது கூட்டணிக்கட்சியினருடன் அதே பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளார்.
அப்போது, திமுகவினர் ஒருபக்கமும், தேமுதிகவினர் ஒரு பக்கமுமாக நின்று வாக்கு சேகரித்துக்கொண்டு இருந்தபோது, மசூதியிலிருந்து வெளியே வந்த பெரும்பாலான மக்கள் திமுக வேட்பாளர் நின்றுகொண்டிருந்த பகுதிக்கு சென்று வேட்பாளரிடம் வணக்கம் சொல்லிவிட்டு கலைந்து சென்றதாக தெரிகிறது.
திமுக வேட்பாளருக்கு அருகில் சென்ற மக்களின் எண்ணிக்கையை காட்டிலும் பலமடங்கு குறைவான மக்களே தேமுதிக வேட்பாளர் இருந்த பகுதிக்கு வந்ததாக தெரிகிறது.
இதனால், தேமுதிகவினர் தகாத வார்த்தைகள் கூறி திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது, தேமுதிக கொடியை கட்டியிருந்த ஒரு இரும்பு கம்பியை தூக்கிக்கொண்டு ஒரு தொண்டர் திமுக வேட்பாளர் உமாராணியை தாக்கும் நோக்கத்தில் பாய்ந்து சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த திமுகவினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து திட்டமிட்டு திமுக வேட்பாளர் உமாராணியை தாக்கும் நோக்கத்தில் செயல்பட்ட தேமுதிகவினர் மீது நடவடிகை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் சார்பாக சேலம் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் முறைப்படி காவல்துறையின் அனுமதியுடன் ஜாமியா மசூதி அருகே சென்று வாக்கு கேட்டுள்ளனர், ஆனால், தேமுதிகவினர் போலீஸ் அனுமதியில்லால் அங்கு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.