‘இப்படி குனிந்து அனுமதி கேட்கலாமா?’... சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏவின் ஆக்ஷன்!
சட்டசபையில் நேற்று சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அப்போது முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசினர்.
முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், உறுப்பினர் சாந்தி தே.மு.தி.க.வில்தான் இருக்கிறார். ஆனால் அவரை எதிர்கட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ், சந்திரகுமார் ஆகியோர் ஓடுகாலி, துரோகி என்று கூறுகின்றனர். ஆனால் அவர் தே.மு.தி.க.வில்தான் இருக்கிறார். சாந்தியை அப்படி கருதினால், அவர் மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கலாமே என்றார்.
பின்னர் முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், பேசுவதற்கு எந்த உறுப்பினரையும் சபாநாயகர் அழைக்கலாம். அது அவரது உரிமை. அதில் நீங்கள் குறுக்கிட முடியாது. சமீபத்தில்கூட உங்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் (பண்ருட்டி ராமச்சந்திரன்) வெளியே சென்றுவிட்டார். அச்சுறுத்தி, மிரட்டிப் பேசுவதுபோல் பேசாதீர்கள் என்றார்.
அப்போது மோகன்ராஜ் எழுந்து, தனது உடலை குறுக்கி, கையைக் கட்டிக்கொண்டு, இப்படி குனிந்து நின்று கொண்டு அனுமதி கேட்கலாமா? என்று சபாநாயகரிடம் கேட்டார். அதைப் பார்த்த சபாநாயகர் தனபால், பேச அனுமதிக்க முடியாது என்று கூறியதும், உடனே தனது வாயைப் பொத்திக்கொண்டு மோகன்ராஜ் தன் இருக்கையில் உட்கார்ந்தார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.