மவுலிவாக்கம் விபத்து- சிபிஐ விசாரணை கோரி திமுகவினர் பிரம்மாண்ட ஊர்வலம்! ஆளுநரிடம் மனு!!
சென்னை: மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சென்னையில் திமுகவினர் சென்னையில் இன்று பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் முடிவில் ஆளுநர் ரோசையாவிடம் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாகினர். இந்த கோர விபத்து குறித்து தமிழக அரசின் ஒருநபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
ஆனால் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணையை திமுக வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை சட்டசபையிலும் திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

பிரம்மாண்ட ஊர்வலம்
இந்த நிலையில் மவுலிவாக்கம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி இன்று பிரம்மாண்ட ஊர்வலத்தை சென்னையில் திமுக நடத்தியது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு சிபிஐ விசாரணை கோரி முழக்கங்களை எழுப்பினர்.

அறப்போராட்டம் ஏன்?
ஊர்வலத்தின் முடிவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை குறித்தும் அதற்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை எல்லாம் குறித்தும் உடனடியாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதை தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தாலும் அதனை உடனடியாக நிறைவேற்றி நடத்திட வேண்டும் என்ற நிலையிலே தான், அறப்போராட்டமாக இந்த மாபெரும் பேரணியை தி.முகவின் சார்பில் நடத்திருக்கிறோம்.

திமுகவின் சக்தி இது....
அப்படிப்பட்ட அமைதி முறையில் நடத்தியிருக்க கூடிய இந்த பேரணியில் நீங்கள் எல்லாம் மிக சிறப்பான முறையில் வருகை தந்து உங்களின் உணர்வுகளை எல்லாம் வெளிப்படுத்தி திராவிட முன்னேற்ற கழகத்தின் சக்தி என்ன என்பதை நிலைநிறுத்தி இருக்கின்றீர்.ஆக இந்த மாபெரும் பேரணியை வெற்றிகரமாக நடத்தி தந்திருக்க கூடிய உங்களுக்கெல்லாம் முதலில் மாவட்ட கழகத்தின் சார்பிலும்,திமுகவின் சார்பிலும் ஏன் நம் தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும் உங்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

தொடரும் போராட்டம்
ஜெயலலிதா உடனடியாக சிபிஐ விசாரணைக்கான உத்தரவை வழங்க வேண்டும் அப்படி வழங்குகிற வரையிலே தொடர்ந்து போராட்டங்களை நடத்திட திமுக தன்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறது.

ஆளுநருடன் சந்திப்பு
பின்னர் ஆளுநர் ரோசையாவை நேரில் சந்தித்து மவுலிவாக்கம் விபத்துக்கு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி ஸ்டாலின் மனு ஒன்றை அளித்தார். அப்போது துரைமுருகன், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, ஜெ. அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications